மின்னஞ்சலில் காணாமல் போன தோழி

யாஹூவின் அரட்டை அரங்கத்திற்கு (Chat world) பொதுவாக நுழையமாட்டேன். அன்று ஏனோ அலுவலில் வேலை இல்லையன்பதாலும், பொழுதுபோகவில்லையென்பதாலும், சரி போகலாம் என்று நுழைந்தேன். அதனை தவிர்ப்பதற்கு காரணம், அரட்டைக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம் என்பதால். ஒருவர் வந்து பேச்சு கொடுத்தார். ஏ.எஸ்.எல் எல்லாம் கேட்ட பிறகு சும்மா கொஞ்ச நேரம் பேசினோம். பெண் என்று தெரிந்தது. பெண் என்று சொல்லியும் பலர் வருவார்கள். பெயர் பிரியா என்றும், சென்னை அடையாறை சேர்ந்தவள் என்றும் கூறினாள். திருமணமாகி சில மாதங்களே ஆகி தற்போது (அப்பொழுது) ஆஸ்திரேலியாவில் இல்லத்தரசியாக இருப்பதாகவும் கூறினாள். அவள் தம்பியும் ஆஸ்திரேலியாவில் தான் படித்துக் கொண்டிருப்பதாகவும், ஆனால் அவன் தனியாக அவன் நண்பனுடன் தங்கியிருப்பதாகவும், எப்பொழுதாவது வந்து பார்ப்பான் என்றும் கூறினாள்.

அந்த நாட்களில், 2004-ல், நான் பெங்களூரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். தினமும் இந்திய நேரம் 11 மணியளவில் அரட்டைக்கு வந்துவிடுவாள். 2-3 மணிநேரம் நீளும். இரண்டொரு நாளிலேயே அன்யோன்யமாகி விட்டாள். என்ன நினைத்தாளோ தெரியவில்லை, திடீரென்று தன் குடும்ப கஷ்டங்களையெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டாள். தினமும் தன் வீட்டில் நடப்பனவற்றை என்னிடம் ஒப்புவிக்க ஆரம்பித்து விட்டாள். தன் ஹோம் சிக், எந்த அளவு தன் பிறந்த வீட்டை மிஸ் செய்கிறாள் என்று அரட்டை நீளும். சென்னைக்கு வந்தால் வீட்டிற்கு வருமாறு கூறினாள். தனக்கும் தன் கணவருக்கும் இடையில் நடக்கும் சிறு சிறு சண்டைகள், பின் சமாதானம், தனிமையில் அவளுக்கிருக்கும் கஷ்டம், அங்கிருக்கும் இந்திய கணவர்கள் எவ்வாறு இந்தியாவில் இருக்கும் தன் மனைவிமார்களுக்கு துரோகம் இழைக்கிறார்கள், வீட்டு வேலை அவளை பாடாய் படுத்துவது என்றெல்லாம் புலம்புவாள். அவளின் சங்கடங்களை நினைத்து 2005-ல் நான் எழுதிய பதிவு இது. எங்கள் இருவருக்கும் இடையில் இருந்த ஒரே தொடர்பு யாஹூ மின்னஞ்சல் முகவரி மட்டுமே. அதனை தவிர்த்து வேறெதுவும் கிடையாது.

சில நாட்கள் கழித்து அவள் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், பிரசவத்துக்கு ஓரிரு வாரத்தில் சென்னை செல்வதாகவும் கூறினாள். அந்த இரு வாரமும் ஊருக்கு போகப்போவதில் அவளுக்கு நிறைய சந்தோஷங்கள். சென்னையில் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற கனவுகள் வேறு. ஊருக்கு செல்வதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தாள். பின் ஊருக்கு செல்வதில் இருந்த இழுபறியும் அவளை பாதிக்கவே செய்தது. ஒருவழியாக எல்லா இழபறியும் கழிந்து ஊருக்கு செல்லும் நாளும் வந்தது. சென்னைக்கு கிளம்பும் அன்றும் தன் கணவனுடன் ஏதோ மனஸ்தாபம், பின் வழக்கம் போல சமாதானம்.

சென்னைக்கு வந்ததும் மின்னஞ்சல் அனுப்புமாறு பேசிவைத்துக்கொண்டோம். அது தான் நான் அவளிடம் பேசிய (சாட்டிய) கடைசி நாள். சென்னைக்கு வந்தவள் பின் எந்த மின்னஞ்சலும் அவளுடமிருந்து வரவில்லை. சரி! பிஸி போல என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் அதன் பின்னும் அவளிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. நானும் சில நாட்கள் கழித்து மின்னஞ்சல் அனுப்பினேன். ஆனால், மவுனமே பதிலானது. பிரச்சினை என்னவென்றால் அவள் என்ன ஆனாள் என்பதுதான். மின்னஞ்சல் முகவரி தவிர்த்து வேறெதுவும் என்னிடம் கிடையாது. நானும் நினைவுக்கு வரும் போதெல்லாம் மின்னஞ்சல் அனுப்புவேன். அவள் மின்னஞ்சல் முகவரியும் / கடவுச்சொல்லும் அவளுக்கு மட்டுமே தெரியுமாதலால் வேறொருவரும் எனக்கு பதில் சொல்ல முடியாது. ஒருவாறு பயம் மட்டுமே மிஞ்சும்…

Add comment ஜூலை 11, 2007

தொட்டால் பூ மலரும் – நியூரான் மற்றும் சைக்கான்

இது என்னை அறியாமல் ஒரு தொடர் போல இருக்கும் போல் தெரிகிறது. காரணம் நான் எழுத நினைத்தது ஆவிகளை பற்றி. ஆனால் அதற்கு முதலில் சைக்கான் பற்றியும், டெலிபதி பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. சைக்கான் பற்றி தெரிந்துகொள்ள நியூரானை பற்றி தெரிந்திருந்தால் சற்று சுலபமாக இருக்கும் என்பதால், முதலில் நியூரான்கள்.

நியூரான்கள், ஆங்கிலத்தில் Neuron, என்பவை செல்கள். வெறும் செல்கள் அல்ல. மின்சார சக்தி நரம்பு வழியாக ஊடுருவ உதவும் செல்கள். மின்சார சக்தி எதற்கு நரம்பு வழியாக ஊடுருவ வேண்டும்? அதன் பயன்கள் என்ன? ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் ‘உணர்ச்சி’. உங்கள் கை உங்களை அறியாமல் நெருப்பை தொடும்பொழுது மூளைக்கு ‘இது நெருப்பு; கையை எடு’ என்று உங்கள் மூளைக்கு ‘உணர்த்து’வது இந்த நியூரான்கள் தாம். அந்த கனத்தில் உங்கள் மூளை உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மூளை அந்த கனத்தில் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு உங்கள் கையை அனிச்சை செயலாக நெருப்பில் இருந்து எடுக்க வைக்கிறது. உணர்ச்சிகளின் மையமே இந்த நியூரான்கள் தாம். முதுகெலும்புள்ள உயிர்கள் (Vertebrates) அனைத்திற்கும் உள்ள நரம்புகள், மூளை, முதுகெலும்புகள் ஆகியவற்றில் பிரதான பங்களிப்பு செய்வது இந்த நியூரான்களே.

ஒவ்வொரு நியூரான்களும் ஒவ்வொரு கணினி ப்ரோக்ராம் போல. அவைகளின் வேலை,
1) மற்ற நியூரான்களிடமிருந்து தகவல்களை பெருவது (INPUT)
2) அந்த தகவல்களை செயலாற்றுவது (PROCESS)
3) பின் அவற்றை மற்ற நியூரான்களுக்கு அனுப்புகிறது (OUTPUT)

INPUT –> PROCESS –> OUTPUT

நம் உடலின் இயக்கம் (நடை, ஓட்டம்), ஐம்புலன்கள் (பார்வை, கேட்கும் திறன், சுவை, தொடுதல்), முடிவெடுப்பது, யோசிப்பது, கனவு காண்பது, திட்டமிடுதல் போன்ற செயல்கள் மற்றும் எல்லா மூளையை உபயோகிக்கும் செயல்கள் யாவற்றிற்கும் பல வகையான நியூரான்கள் தேவைப்படுகின்றன. இதன் மொத்த வகைகள் பத்தாயிரத்திற்கும் மேல். இந்த மேற்கூறிய செயல்கள் செய்ய சுமாராக எத்தனை நியூரான்கள் தேவைப்படும்? சாதாரண மனித மூளையில் (மட்டும்) இருக்கும் மொத்த நியூரான்களின் எண்ணிக்கை இருபதாயிரம் கோடி என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இவற்றில் ஒவ்வொரு நியூரானும் ஐந்தாயிரம் முதல் இரண்டு இலட்ச மற்ற நியூரான்களுடன் இணைந்திருக்கிறது. இந்த நியூரான்கள் வழியாக தகவல் பரிமாற்றம் செய்யபடுவதற்கான வழிகள் மட்டுமே, இந்த பிரபஞ்சத்தில் உள்ள மொத்த அணுக்களின் எண்ணிக்கையை விட அதிகம்! அப்படியானால் இந்த நியூரான் நெட்வொர்க் எப்படி பட்டது என்று சற்றே சிந்தித்து பாருங்கள்!! நியூரான்களின் எண்ணிக்கையே நம்மை மலைக்க வைக்கிறது என்றால், அந்த நியூரான்களுக்கு உதவி செய்யும் லியா (Glia) செல்களின் எண்ணிக்கை மட்டும் நியூரான்களின் எண்ணிக்கையை விட 10 மடங்கு அதிகம்!!! இவை நியூரான்கள் கட்டுக்கோப்பாக இருக்க உதவுவதோடு மட்டுமல்லாமல், மூளையில் செல்கள் இறந்தவுடன் அவற்றை அப்புறப்படுத்தவும் செய்கிறது.

மறுபுறம், மிகக் குறைவாக ஒட்டுன்னி வகையை சேர்ந்த புழுக்களுக்கு 302 நியூரான்கள் மட்டுமே. அதனால் விஞ்ஞானிகள் இந்த ஒட்டுன்னிகளை வைத்து மற்ற உயிரிணங்களுக்குண்டான நியூரான்களின் வரைபடத்தை வரைகின்றனர்.


(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)

மூளையையும், முதுகு தண்டுவடத்தையும் இணைத்தால் வரும் பகுதி தான் மத்திய நரம்பு மண்டலம். ஆங்கிலத்தில் Central Nervous System (CNS). இது தான் சைவத்திற்கும், அசைவத்திற்கும் வேறுபடுத்துகின்றது.

வெஜிடேரியனிசம் பதிவில் இருந்து
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம்.

சரி! விஷயத்திற்கு வருவோம். நமக்கு நியூரான்கள் மூன்று சுவைகளில்(!) கிடைக்கிறது.

1) உடல் இயக்க செயல்பாடுகள் பற்றின தகவல் பரிமாற்றதிற்கு (Motor நியூரான்கள்).
2) ஐம்புலன்கள் சம்பந்தப்பட்டவை (Sensory நியூரான்கள்).
3) தங்களுக்குள் தகவல் பரிமாற்றதிற்கு (Inter நியூரான்கள்).

நியூரானின் தோற்றம்


(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)

ஒவ்வொரு நியூரானும் நான்கு பகுதிகளை கொண்டது. முதல் பகுதி சோமா (Soma). இது தான் நியூரான்களின் மையப்பகுதி. இரண்டாவது மற்றும் மூன்றாவது பகுதிகள், முன்பே சொன்ன, செயல்பாடு. அதாவது வேலையை கச்சிதமாக முடிக்க பயன்படுவது. இவை அதன் சோமாவில் இருந்து வெளிப்புறமாக இருக்கும், நம் கைகள் அல்லது காதுகளை போல. தகவல் உள்ளே வருவது டென்ட்ரைட் (dendrite). தகவல் வெளியேறுவது ஆக்ஸான் (axon) என்னும் மறுவழியில். ஒரு நியூரானுக்கு ஆயிரம் டென்ட்ரைட் இருக்கலாம், ஆனால் ஒரே ஒரு ஆக்ஸான் மட்டுமே இருக்கும். நான்காவது பகுதி ஆக்ஸான்-ன் முனையில் இருக்கும் ஆக்ஸான் டெர்மினல்ஸ் (axon terminals). இந்த முனைகள் முக்கியமானவை. இவைகள் ஒரு தனி ராஜாங்கமே அமைக்கும் செல்கள். இவைகள் தங்களுக்குள் இருக்கும் இடைவெளிகளின் மூலம் தங்களுக்கு இடையில் தொலை தொடர்பு வசதியை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த இடைவெளிகளுக்கு சினாப்ஸ் (Synapse) என்றும், இந்த செயலுக்கு நியூரான் டாக்டரைன் என்றும் பெயர்.

தகவல் பரிமாற்றம் எப்படி நடைபெருகிறது?


(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)

நியூரான்களின் தகவல் பரிமாற்றம், மேலே சொன்ன, சினாப்ஸின் ஊடே வேதியியல் / மின்சார சமிக்சையின் ஓட்டத்தால் நடைபெறுகிறது. இங்கே நியூரான்களின் வேலை சமிக்சையை உள்வாங்கி (INPUT), அதனை பரிமாற்றம் செய்து (PROCESS), பின் அந்த தகவலை வெளிப்படுத்துகிறது (OUTPUT). இது எந்த வகை நியூரான்களுக்கும் பொருந்தும், இரண்டு சூழ்நிலைகளை தவிற. 1) முதல் சுவை நியூரானகளான மோட்டர் நியூரான்களின் வெளிப்பாடு தசைகளுக்கு செல்வதால் இந்த சூழ்நிலையிலும் தகவல் இன்னொரு நியூரானுக்கு செல்லாது. 2) மற்றும் இரண்டாம் சுவை நியூரான்களின் ஐம்புலன்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சி என்பது ஒரு வெளிப்புற தூண்டுதல் தேவைப்படுகிறது (Enternal physical stimulus). அதனால், அது மட்டும் மற்றவை போல சினாப்ஸ் மூலமாக பெறப்படுவது அல்ல.

மூன்றாவது சுவை நியூரான்களான இன்டர் நியூரான்கள் தங்களுக்குள் தகவல் பரிமாற்றம் செய்வதால் அதன் தகவல் உள்ளே வருவதும் நியூரான்கள் மூலம், வெளியே செல்வதும் நியூரான்கள் மூலம். அதனால், இந்த நியூரான் மற்ற நியூரான்களுடன் கட்டாயம் இணைந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் தகவல் பரிமாற்றம் நிகழாது. மேளேயுள்ள படத்தை பாருங்கள். இதில் தகவலானது மஞ்சள் நிற நியூரான் A-வில் இருந்து நீல நிற நியூரான் B-க்கு சென்று பின் பிங்க் நிற C-க்கு செல்கிறது.

டென்ட்ரைட் மற்றும் ஆக்ஸான்கள் நீயூரான்களின் பகுதிகள். ஆனால் சினாப்ஸ் நியூரான்களின் பகுதி அல்ல. சினாப்ஸ் தான் தகவல் பரிமாற்றத்திற்கு முக்கியமான பகுதி. சினாப்ஸ் இல்லாமல் தகவல் பரிமாற்றம் நிகழாது. நினைவில் கொள்க, ஒரு நியூரானுக்கு ஒரே ஒரு சினாப்ஸ் மூலமாக மட்டும் தகவல் வராது. மாறாக, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சினாப்ஸ்களிடமிருந்து தகவல்கள் வந்து சேரும். மற்றும் தகவல் சினாப்ஸ் மூலமாக உள்ளே வருவது எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம், டென்ட்ரைட் மூலமாக மட்டும் அல்ல.

படத்தின் மூலம் ஏற்படும் கேள்விகள்.

1) உள்ளே வரும் தகவலின் இயல்பு என்ன?
2) சோமா எப்படி அந்த தகவலை செயல்படுத்துகிறது?
3) வெளியே செல்லும் தகவலின் இயல்பு என்ன? எப்படி இருக்கும்?

இந்த கேள்விகளுக்கு பதில் சினப்ஸில் நடப்பது தான் நியூரானில் எதிரொலிக்கும். நியூரானில் நடப்பது தான் சினப்ஸில் எதிரொலிக்கும். ஆக ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கிறது. நியூரான்கள் தகவலை உள்வாங்கியவுடன் அது செய்யும் செயல் ஆக்க்ஷன் பொட்டென்ஷியல்கள் (Action potentials) எனப்படும் சிறு சிறு மின்சார சமிக்சைகளை, அயான்களை (ions), உருவாக்கும். இவை ஆக்ஸானின் மையப்பகுதியில் இருந்து உருவாகிறது. இது எதற்கு? நியூரானில் உள்ள புரத தோலானது மின்சார சமிக்சைகளான தடுக்கும் அரணாக உள்ளது. நியூரானின் உள்ளே இருக்கும் அயான்களின் நிறை மாறும்பொழுது, அந்த புரத தோல் மாறுகிறது. ஒரு குறிப்பிட்ட அளவு மாறும்பொழுது அது தன் பழைய நிலைக்கு திரும்ப முடிவதில்லை. அந்த நிலையில் பெரிய அளவில் மின்சார சமிக்சை உருவாகிறது. இது தான் ஆக்க்ஷன் பொட்டென்ஷியல். இந்த சமிக்சை ஆக்ஸான் வழியாக போய் சேர்ந்து ஆக்ஸான் டெர்மினல்ஸை அடைகிறது. அவ்வாறு ஆக்ஸான் டெர்மினலை அடையும் பொழுது அது நியூரானிலிருந்து வெளியே செல்லும் தகவலாக, சிறு மிண்சார அதிர்வாக, செல்கிறது (OUTPUT). இந்த வெளிப்பாடு மற்ற அருகில் இருக்கும் நியூரானுக்கு INPUT-ஆக அமைகிறது.


(பெரிதாக காண, படத்தை கிளிக்குங்கள்)

அடுத்து, சைக்கான்கள் பற்றி பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.

நியூரானின் அமைப்பை பற்றின மற்ற படங்கள் கீழே:




6 comments ஜூன் 6, 2007

இப்படி கூட திருடலாமோ?

எங்க ஊரு நகை கடை பஜாருல வித்தியாசமான திருட்டெல்லாம் நடக்கும்.

ஒரு நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து, பெரும்பாலும் வெள்ளிக்கிழமை (ஏன்னா? சனி, ஞாயிறு கோர்ட் லீவு), ஒரு மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் போல, ஒரு போலீஸ் ஒரு திருடனை கூட்டி வருவார். போலீஸ் பெரும்பாலும் ‘கார்டன் சிட்டி’ பெங்களூருவில் இருந்து வருவார்கள். திருடனும் திருடனும் (அதாங்க அவர் கூட வந்த போலீஸ்) அகஸ்மாத்தா ஒரு நகை கடையை தேர்ந்தெடுப்பார்கள். பின் அந்த போலீஸ் அந்த கடையில் வந்து உட்கார்ந்து கொள்வார். போலீஸ் ஆரம்பிப்பார்.

“நீங்க இந்த திருடன் கிட்ட இருந்து 100 பவுன் திருட்டு நகையை வாங்கியிருக்கீங்க. இது சட்டப்படி குற்றம்(!)”-ன்னு ஆரம்பிப்பார். 100 பவுன் என்பது ஒரு சிறிய நகை கடைக்கு. ‘சிறிய’ என்றால் அந்த கடையில் கல்லா பெட்டி மட்டுமே இருக்கும். கொஞ்சம் போல Jewellery shop மாதிரி அலங்கரித்திருந்தால், கொஞ்சம் பட்ஜெட் அதிகமாகும். இது அடிக்கடி நடப்பதால், பஜாரில் சோம்பலோடு தான் பரவும், ‘ஹூம்! ஆரம்பிச்சுட்டாய்ங்களா?”-ன்னு. “அண்ணே இன்னைக்கு நம்ம ****** கடையில வெச்சுட்டாங்க”-ன்னு சொல்லி அந்த கடையில ஒரு மினி பொதுக்கூட்டம் நடக்கும். கூட்டம் இந்த கடைக்காரருக்கு உதவ. ஏன்னா! பின்னால இவங்களுக்கும் உபயோகமா இருக்கும் இல்ல? மனித குலம் is a social animal தானே!!!

நெத்தியடி படத்துல சாவு வீட்டுல ஒரு பெரிசு திண்ணையில உக்காந்து சரக்குக்கு காசு கரக்க ஆரம்பிக்குமே, அதுபோல, “சரி! நடந்தது நடந்து போச்சு(!!!!!). இதை நான் அப்படியே மூடி மறைச்சுடறேன். ஒக்காந்து பேசலாமா?”-ன்னு ஆரம்பிப்பார். இல்லை நாங்க சட்டப்படி பார்த்துப்பேன்னா என்ன நடக்கும்? அந்த கடைக்காரரை விசாரணைக்கு அழைத்து போவார் போலீஸ்காரர். எங்கே? பெங்களூருக்கோ அல்லது கர்நாடக எல்லை போலீஸ் சரகத்துக்கு எங்கேயாவது கூட்டி போவார். ‘எப்படியும்’ திரும்புவோம், அல்லது திரும்பாமலும் போகலாம். (சேட்டு) ஒருத்தர் இப்படி போய், பயங்கர உள் காயங்களோட திரும்பி வந்து கடைசியில் செட்டில் தான் செய்தார்.

(இதுல இன்னொரு கூத்து. இப்படி தெரியாம திருட்டு நகை வாங்கி ஜெயிலுக்கு போன ஒரு பாய், ஜெயிலுக்கு போய் வந்து ஒரு கடை ஆரம்பித்தார். ஜெயிலில் ஒரு திருடன் அறிமுகம் போல. ஒரு நாள் இவர் கடையை க்ராஸ் செய்த அந்த திருடன் சும்மா “வணக்கம் பாய்”-ன்னு ஒரு சலாம் போட்டுட்டு போக, அடுத்த நாள் போலீஸ் இவர் கடைக்கு வந்துடுச்சு “இவன் எதுக்கு உனக்கு வணக்கம் வெச்சான்?”. அது ஒரு தனி கூத்து…)

மேலும், இவர்கள் வைத்திருப்பது கருப்பு பணம். அதுவும் இவர்கள் பயப்படுவதற்கு ஒரு காரணம்.

ஸோ, இப்பொழுது கடைக்காரர் தன் மற்ற கடைக்கார சகாக்களோடு ‘உக்காந்து யோசிச்சு’ இந்த சிக்கலான பிரச்சினைக்கு டீல் பேசுவார். கடைசியில் எல்லோரும் சேர்ந்து (திருடன் 1 + திருடன் 2 + கடைக்காரர்கள்), டார்கெட்டட் கடைக்காரருக்கு மொட்டை அடித்து, 50-75 பவுன் வரை, பைசல் செய்து திருடன் 1 + திருடன் 2 ஆகியோரை பாசத்தோடு வழியனுப்பி வைத்து, அடுத்த சான்ஸுக்கு காத்திருப்பார்கள்…16 வயதினிலே ஸ்ரீதேவி மாதிரி…

8 comments மே 10, 2007

லொள்ளு சபா – II

விஜய் டி.வி.யின் கலக்கலான நிகழ்ச்சிகளில் ஒன்றான லொள்ளு சபா இப்பொழுது சற்றே புதுப் பொலிவுடன் மீண்டும் கலக்கிக் கொண்டிருக்கிறது. இருக்கும் வேலைகளை முடித்து / ஒதுக்கிவிட்டு இந்த நிகழ்ச்சியை மட்டும் எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று பார்க்க வைக்கும் நிகழ்ச்சி. இதற்கு முன் வந்த லொள்ளு சபாவை விட பல விஷயத்தில் முன்னேற்றம் தெரிகிறது. முக்கியமான முன்னேற்றம் அதன் பட்ஜெட்.

பட்ஜெட்டை சற்று அதிகமாகவே ஒதுக்கியிருக்கிறார்கள். முன்பு அதன் ஒளிப்பதிவு சுமாராகவே இருக்கும். ஆனால், இப்பொழுது அதில் நல்ல முன்னேற்றம். நிகழ்ச்சி நன்றாக இருக்க என்னென்ன வேண்டுமோ அவை யாவையும் செய்துகொடுக்கிறார்கள். வே.வி. படத்திற்காக டொயோட்டா க்வாலிஸ் வண்டி (கவணிக்க, அவர்களுக்கு ஒரு கொஞ்சம் பெரிய பட்ஜெட்). பெரிய திரையில் வரும் துணை நடிகர்களை நடிக்க வைக்கிறார்கள். நடிகர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு முழுக்க முழுக்க காரணம் அதன் இயக்குனர். முன்பு சந்தானம் இருந்த வரை அது ஒன் மேன் ஷோவாக இருந்தது. மேலும் முன்பு இருந்த சில பிரச்சினைகளையும், மைனஸ் பாயின்ட்களையும் சரி செய்து மிளிர்கிறது. முக்கியமான கதாபாத்திரங்களாக சுவாமிநாதன், ஜீவா மற்றும் அதி முக்கியமாக மனோகர். மனோகருக்கென்று ஆர்குட்டில் ஒரு குழுவே இருக்கிறது. அதன் முகவரி இங்கே. இதில் இப்போதைக்கு 8215 உருப்பினர்கள். இவர்களில் சில கதாபாத்திரங்களுக்கென்று சிலர் ஒதுக்கப்பட்டிருக்கிறார்கள். சிவாஜி, இப்போதைய கமல் போன்றோருக்கு சுவாமிநாதனும், ஹீரோயிசம் கலந்த பாத்திரங்கள், ரஜினி, பாக்யராஜ், ‘குணா’ கமல், லியோனி ஆகியோருக்கு ஜீவா. மற்றும் முக்கியமாக மனோகர். அவருடைய கையை சுத்தும் மேனரிஸத்துக்கென்றே ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு.

லொள்ளு சபாவில் நான் மிகவும் ரசிப்பது இவை:

1) என்ன தான் சினிமாவை ரீ-மிக்ஸ் செய்தாலும், அவர்களுக்கென்று ஒரிஜினாலிட்டி இருப்பது. அதாவது, கதையின் வரியை மட்டும் சுட்டு, பின் அதை தங்கள் இஷ்டம் போல சிரிக்க கூடிய வடிவில் கொடுப்பது. ஆனால், எல்லோராலேயும் இது முடியாது. சன் டி.வி.யில் ஞாயிறு இரவு வரும் டாப் டென் ஒரு சொதப்பலான லொள்ளு சபா. அவர்கள் அ(க)டிக்கும் ஜோக்கை முன் கூட்டியே கணித்து விடலாம். ஆனால், இந்த லொள்ளு சபாவோ வேறு.

2) இவர்களின் ஜோக் ஒரிஜினலாக இருக்கும். உதா,

படம்: “கசந்த மாளிகை”
சிவாஜி வேடத்தில் சுவாமிநாதன். நாகேஷ் வேடத்தில் மனோகர். வாணி வேடத்தில் நடித்த பெண் பெயர் தெரியவில்லை.
ஆட்டோவில் இருந்து இறங்கி வாணியை காப்பாற்றுகிறார்.

சிவாஜி: “நாளைக்கு வந்து வீட்டுல என்னை பார். இது என் அட்ரஸ்” என்று அட்டையை கொடுக்க,
வாணி: ஐ.டி.சி, கல்கத்தா. சார் உங்க வீடு கல்கத்தாலயா இருக்கு?
சிவாஜி: ஹா…ஹா…நீ பாக்குறது சிகரெட் அட்டை. பின்னால திருப்பி பார்.
(திருப்பி படித்துவிட்டு டர்ராகிறார்)
வாணி: ‘பக்கத்து தெரு’. இப்படி இருந்தா எப்படி சார் கண்டிபிடிக்கிறது?
சிவாஜி: நேரே என் தெருவுக்கு பக்கத்து தெருவுக்கு வந்து இந்த கார்டை காட்டினா என் தெரு எதுன்னு சொல்லிடுவாங்க.
(வாணி கடுப்பாக, சிவாஜி அதை வாங்கி திருத்தி தருகிறார். வாணி அதை படித்து மேலும் டர்ராகிறார்).
வாணி: ‘இதே தெரு’வா?
சிவாஜி: ஆமாம்மா! நேரா என் தெருவுக்கு வந்து இந்த அட்டையை காட்டினா என் தெருவை காட்டிடுவாங்க.

இதே படத்தில்,

சிவாஜி: என்னம்மா! படிச்ச பொண்ணா இருந்துகிட்டு இப்படி கத்துற?
நாகேஷ் (நம்ம மனோகர் தான்): பின்ன படிச்ச பொண்ணா இருந்தா அண்ணா யூனிவர்ஸிட்டி, அழகப்பா யூனிவர்ஸிட்டின்னா கத்தும்?

3) விஜய் டி.வி. இந்தியாவின் சிறந்த ப்ரொமோட்டர் (Best promoter) விருது வாங்கியிருக்கிறது. அதாவது தங்கள் நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதில் இந்தியாவில் சிறந்த தொலைக்காட்சி நிறுவனம் என்ற விருது. இதில் across programmes கூட விளம்பரப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பிடத்தகுந்தது, ‘கலக்கப்போவது யாரு?’ நிகழ்சிக்கு லொள்ளு சபா அணியை கலக்க விட்டிருப்பார்கள். அதாங்க, “மூனுக்கு போகலாம் வாங்க”. புது புது யுக்தி மூலம் நிகழ்ச்சிக்கு விளம்பரப்படுத்துவதில் விஜய்க்கு நிகர் விஜய் தான். லொள்ளு சபா டீம் இதிலா தவறவிடுவார்கள்?
“திவ்யா! எங்கடா கண்ணு போய்ட்ட. மூணு அவரா வெயிட் பன்னுறேண்டா. இ இ இ…” – தனுஷ்,
“மூனு பேருக்கு நல்லது நடக்குதுன்னா எதுவும் தப்பில்லே” – கமல்,
“ஆச வெச்ச பச்ச கிளியோ, அது மூனை தேடி போயிருக்கு” – டி.ஆர்.,
“அண்ணா! மூனு அவரா அடக்கி வெச்சுட்டு இருப்பீங்க. நீங்க போங்கனா” – விஜய்,
“ஏய்! கூரு மூனு ரூவா. அதுதுதுது” – அஜீத்,
“ஹேய்! நீல் ஆம்ஸ்ட்ராங். என்ன மூனுக்கு போகாம ஒன்னுக்கு போய்ட்டு இருக்க” – ரஜினி.

4) நல்ல அணிக்கு எடுத்துக்காட்டு இவர்கள். முன்பு சந்தானம் இருந்த வரை ஒன் மேன் ஷோவாக இருந்தது. சந்தானம் சென்றது இது த்ரீ மேன் ஷோவாகியிருக்கிறது. அது சுவாமிநாதன், மனோகர், ஜீவா கூட்டனி. இந்த அணியின் கலகலப்புக்கு எடுத்துக்காட்டு தமிழ் புத்தாண்டுக்கு வந்த “சந்தானத்துடன் ஒரு லொள்ளு பயணம்”.
“இதுங்க இருக்கே எல்லாம் நவக்கிரகங்கள் மாதிரி. ஒவ்வொன்னும் ஒவ்வொரு மூலையில இருக்கும். ஆனா, ஒருத்தருக்கும் மூளையே இல்ல” – சந்தானம்.
“தளபதி” படத்தில் மனோகருக்கு கலிவரதன் வேடமாம். காலையில் இருந்து ‘சூர்யா’ என்று கத்தும் ஒரே டயலாக் மனோகருக்கு. மாலையில் டேக் போகும் பொழுது கரெக்டா ‘தேவா’ என்று ரஜினியை ஆழைத்து டைரக்டரை டென்ஷனாக்கியிருக்கிறார்.
நல்ல அணி என்றால், இப்படி கலாய்க்கிறது மட்டும் இல்ல, அது தான் டீமை bind பன்ன உதவுகிறது.

5) கதைக்கு ஏற்ற தலைப்பு. தலைப்புற்கு ஏற்ற கதை. முதலாவதாவது பரவாயில்லை. ஆனால், தலைப்பை வைத்து விட்டு கதையை தலைப்பிற்கு ஏற்றவாறு மாற்றிவிடுவார்கள். ஒரிஜினல் கதைக்கு அப்படியே synchronise செய்து அதற்கு ஏற்றவாறு தங்கள் சபாவில் கதை செய்துவிடுவார்கள்.

முதல் மரியாதையில் சிறைக்கு போன ராதாவுக்காக சிவாஜியில் உயிர் ஊசலாகிக் கொண்டிருக்க, ராதாவை பார்த்ததும் கையில் வைத்திருந்த ‘வெள்ளிக் கம்பி’யால் கோர்க்கப்பட்ட முத்து சரத்தை கீழே விட்டு உயிர் விடும் காட்சி. இதில், சிவாஜியாக நடித்த சுவாமிநாதன் கையில் மிக்சர் பாக்கெட் இருக்கும். அதாவது காந்தி ஜெயந்தி அன்று சாராயக் கடைக்கு சென்று குவாட்டர் வாங்க போன ராதாவை போலீஸ் பிடித்து சென்றுவிடும். குவாட்டர் பாட்டிலோடு ராதா ரிலீசாகிவர, கையில் மிக்சர் பாகெட்டுடன் சிவாஜி உயிர் விடுவதாக காட்டியிருப்பார்கள்.

முதல் மரியாதை தான் அவர்களின் மாஸ்டர் பீஸ். காரணம் இந்த ரீமேக்கில் காமெரா அங்கிள் முதல் காட்சி அமைப்பு வரை நுனுக்கமாக கையாண்டிருப்பார்கள். எடிட்டிங் கூட அசல் படத்துடன் போட்டி போடுவது போல இருக்கும்.
“தயிர் சாதத்த தயிர் சாதம்ன்னு சொன்னானாம்; புளி சாதத்த புளி சாதம்ன்னு சொன்னானாம். அது மாதிரியில்ல இருக்கு நீ சொல்றது”
“எட்டு மணிக்கு வர்ற பஸ்ஸு ஏழு மணிக்கே வந்துடுச்சாம்; ஏழு மணிக்கு வர்ற பஸ்ஸு வரவேயில்லையாம். அது மாதிரியில்ல இருக்கு நீ சொல்றது”
“தம்பி சொல்றதும் சரிதானே!!!”

‘வடையப்பா’வில். ஒரிஜினல் படையப்பாவில் சிவாஜி மாளிகை தூணை கட்டிபிடித்து சாவது போல காட்சியிருக்கும். இதில் சிவாஜியாக நடித்த சுவாமிநாதன், மின்சார கம்பத்தை கட்டி பிடித்து மின்சாரம் பாய்ந்து இறப்பது போல காட்டியிருப்பார்கள்.

6) தங்களை தாங்களே கலாய்த்துக் கொள்வது. இது கொஞ்சம் போல எப்பொழுதாவது வரும்.

ஒரு ரீ-மேக் படத்தில் மனோகர் எதையோ சொல்ல, சுவாமிநாதன் அவரை பயங்கரமாக அடித்து, “நாயே! ஏதோ நீ சொல்றதுக்கெல்லாம் ஜனங்க சிரிக்கிறாங்கன்னு ரொம்ப தான் பேசுற”ன்னு சொல்வார்.

‘கசந்த மாளிகை’யில் தண்ணி அடிப்பது போல ஓவராக தள்ளாட, வாணிஸ்ரீ ‘ஏண்டா! இத பார்த்தா வெறும் கலர் போல இருக்கு. இதை போட்டுட்டா இப்படி ஆடுறீங்க?” என்று கேட்க, சிவாஜியாக நடிக்கும் சுவாமிநாதன், “என்னம்மா பன்னுறது. டி.வி.யில தண்ணி அடிக்கிற மாதிரியும் தம் அடிக்கிற மாதிரியும் காட்டக்கூடாதுன்னு சொல்லிட்டாங்களே!!”

‘புதுச்சேட்டை’யில் ஒரு ஜோக்குக்கு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிக்க, குமார், “அண்ணே! சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே. சிரிக்க வேண்டாம்னு சொல்லுங்கண்ணே”. மற்றவர், “அட போப்பா! லொள்ளு சபாவுல இப்போவெல்லாம் மொக்க ஜோக்கா வருதுன்னு சொல்றாங்க. இப்படி சிரிச்சாத்தான் உண்டு” என்று சிரிப்பார்.

7) படத்தை ரீ-மேக் செய்யாமல் சில தடவை ஓட்ட வேண்டியிருக்கும். அப்பொழுதெல்லாம் அவர்களுக்கு கை கொடுப்பது ராஜா வேடமும் ஊர் பஞ்சாயத்து தலைவர் வேடமும். ஒரு முறை சுவாமிநாதன் ஊர் பஞ்சாயத்துக்காரர். ஊரில் பஞ்சாயத்துக்களில் தீர்ப்பு சொல்லுபவர், அப்படியே முன்னேரி உலகக் கோப்பையில் மோசமாக தோற்று திரும்பியிருந்த இந்திய கிரிக்கெட் அணியின் பஞ்சாயத்து நடக்கும். கடைசியில் இந்திய கிரிக்கெட் அணியை நாட்டைவிட்டே ஒதுக்கி வைத்து தீர்ப்பளிப்பார்.

பஞ்சாயத்து தலைவர் (சுவாமிநாதன்): ஏன் பங்களாதேஷ் கிட்ட தோத்தீங்க?
திராவிட் (ஜீவா): நான் அப்பொவே சொன்னேன், பங்களா தேஷ் கிட்ட தோக்க வேண்டாம், ஆஸ்திரேலியா கிட்ட தோக்கலாம்ன்னு. இவங்க கேக்கல.

8) விஜய் டி.வி. சமீபத்தில் நடிகர் விஜய்யை வம்புக்கு இழுத்திருக்கிறது. மன்னிப்பெல்லாம் கேட்டிருக்கிறார்கள். ‘போக்கிரி’ படத்தை ‘பேக்கரி – 100% ஒன்னுமில்லை’ என்று கலாய்த்திருக்கிறார்கள். இதை பார்த்தால் வேண்டுமென்றெ வம்புக்கு இழுத்திருப்பதை போல இருந்தது. ரசிகர்கள் தியேட்டரில் படம் பார்ப்பது போல கலாய்த்திருந்தார்கள். கொஞ்சம் ஓவர் தான். ஒரு மணி நேரம், மூச்சு தெனற தெனற அடித்தார்கள். விஜய் டி.வி.யின் சிறப்பு நிகழ்ச்சிக்கு விக்ரம் தான் வருவார். சன் டி.வி.யில் விஜய். ஏனோ, இதற்காகவே கலாய்த்திருக்கலாம். சன் டி.வி.யில் டாப் டென்னில் எப்பொழுதும் விஜய் படம் தான் நெ.1 ஆக இருக்கும், படம் ஓடலைன்னாலும் கூட. (சச்சின் படத்தை ஜெயா டி.வி. வாங்கிவிட்ட கடுப்பில், சன் டி.வி.யின் டாப் டென் படம், டாப் டென் பாடல் எதிலும் சச்சின் 10வது இடம் கூட இடம்பெறாதது சன் டி.வி.க்கே உரித்தான, மட்டமான, ஆச்சரியம்).

லொள்ளு சபாவின் கண்றாவிகள்:

* சந்தானம் இருந்த வரை சபாவில் ஆபாசமான, அருவருக்கத்தக்க இரட்டை அர்த்த வசனங்கள் மானாவாரியாக இருக்கும். இப்பொழுது அது குறைந்திருந்தாலும், அவ்வப்போது தலை காட்டிக் கொண்டிருக்கிறது.

* நாயே, பேயே போன்ற கவுண்டமணி ஸ்டைல் வசனங்கள் நிறைய தூவப்பட்டிருக்கும்.

மேலும் நம்ம மனோகரின் சேட்டை வசனங்கள் (அவரின் ஸ்பெசல் கையை ஆட்டி ஆட்டி பேசும் மேனரிஸத்துடன் கற்பனை செய்து கொள்ளுங்கள்):

மனோகர்: “ஆவதும் பெண்ணால; அழிவதும் பெண்ணாலன்னு சொல்றீங்களே! இங்க் பெண்ணா, பால் பாயின்ட் பெண்ணான்னு சொல்லவே இல்லையே”

போலீஸ்: இங்க நடந்த கொலைய நீ பாத்த தானே?
மனோகர்: நான் பாக்கல. இவன் மறைச்சுட்டான்.

ஒரு நேர்முகத் தேர்வில், மனோகரிடம்,
தேர்வாளர்: ஆறுல நூறு போகுமா?
மனோகர்: ம்ம்…போகுமே!!!
தேர்வாளர்: எப்படி போகும்?
மனோகர்: பாய் பொண்டாட்டி நூறு ஆத்துல போனத நான் பார்த்தேனே! அப்போ ஆறுல நூறு போகுமே!!

படம்: ‘அந்நியன்’

கண்களுக்கு முன் முடியுடன் அன்னியன் வந்து ஒரு கம்பத்தில் முட்டிக் கொள்ள, மனோகர், “அதான் உனக்கு கண்ணு தெரியலையே, அப்புறம் எதுக்கு இவ்ளோவ் முடிய விட்டுருக்க. என்ன மாதிரி ஷார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டா வெட்டிக்கலாம் இல்ல?”

படம்: ‘புதுப்பேட்டை’

நண்பர்: எல்லோருக்கும் நாலு நாலு இட்லி கொடு.
மனோகர்: எம்பா! நாலு நாள் இட்லி ஏன் கேக்குற? இன்னிக்கு சுட்ட இட்லி தானே நல்லா இருக்கும்?

அன்பு: (குமாரை காட்டி) யார்றா இவண்?
மனோகர்: இவன தெரியல? இவன் தான் செல்வராகவன் தம்பி.
அன்பு: செல்வராகவன் யார்றா?
மனோகர்: நம்ம கஸ்தூரி ராஜா பையன்.
அன்பு: கஸ்தூரி ராஜா யார்றா?
மனோகர்: நம்ம ஐஸ்வர்யா மாமனார்.
அன்பு: ஐஸ்வர்யா யார்றா?
மனோகர்: நம்ம சூப்பர் ஸ்டார் பொன்ன்ன்ன்ன்னு.
அன்பு: சூப்பர் ஸ்டார் யார்றா?
மனோகர்: அட! இது தெரியல? நம்ம கஸ்தூரி ராஜா சம்பந்தி.
அன்பு: கஸ்தூரி ராஜா யார்றா?
மனோகர்: நம்ம செல்வராகவன் அப்ப்ப்ப்ப்பா.
அன்பு: செல்வராகவன் யார்றா?
மனோகர்: இது கூட தெரியலயா? இவண் அண்ண்ண்ண்ண்ண்ணன்.
அன்பு: (கடுப்புடன்) டேய். இவண் யார்றா?
மனோகர்: அதான் மொதல்லயே சொன்னேனே. செல்வராகவன் தம்பின்னு…

(தொகுதி பிரிக்கும் பொழுது)
அரசியல்வாதி (சுவாமிநாதன்): அடுத்தது எழும்பூர்.
மனோகர்: (தூங்கி கொண்டிருந்தவர் திடீரென்று எழுந்து) நுங்கம்பாக்கம் வந்தா சொல்லுங்க. நான் எறங்ங்ங்ங்கனும்.

அரசியல்வாதி: நாங்க எல்லாம் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்டவங்க.
மனோகர்: எல்லா பழத்துக்கும் கொட்டை இருக்குமா?
அரசியல்வாதி: ஆமாம்பா.
மனோகர்: அப்போ பொன்னம்பலத்துக்கு.

எக்ஸ்: எலே! நான் யாரு தெரியுமா? பாண்டிலே…
மனோகர்: பாண்டில நீ யாரு?
முதலாமவர்: பாண்டிலே…
மனோகர்: அதான் கேக்குறோம், பாண்டி-ல நீ யாரு?

படம்: ‘வேட்டையாடு விளையாடு’

ராகவன்: என்னைய்யா! விசாரிச்சியா?
மனோகர்: விசாரிச்சேன் சார். எல்லாரும் நல்ல்ல்ல்ல்ல்லா இருக்காங்க. அந்த டீ கடைக்காரருக்கு மட்டும் 2 நாளா வயிரு சரியில்லையாம்…

ராகவன்: ஸோ! அந்த பொண்ண இங்க தான் எங்கேயோ பொதச்சிருக்காங்க.
மனோகர்: அப்படியா? (கத்துகிறார்) ராணீ…ராணீ…
ராகவன்: (பெண் குரலில்) போலீஸ் அங்கிள்…நான் இங்க இருக்கேன்…
மனோகர்: சார்…அந்த பொண்ணு குரல் கேக்க்க்க்குது சார்ர்ர்ர்ர்ர்…

படம்: ‘வரலாறு’

அஜித்: அப்பா! நான் ஐநூறு ரூபா கேட்டா, என்ன நூறு ரூபா கொடுக்கறீங்க?
அப்பா அஜீத்: (மனோகரை பார்த்து) டேய் இங்க வாடா! இது எவ்வளாவு?
மனோகர்: ஐ! நூறு ரூபா…
அப்பா அஜீத்: பத்தியா? இது ஐ!நூறு ரூபா.

(அஜீத் தூங்கிக் கொண்டிருக்கும் அப்பாவை கத்தியால் குத்த வருகிறார்.)
மனோகர்: தம்பி. அப்பாவுக்கு முதுகுல குத்துறது பிடிக்காது. ஒரு நிமிஷம் இருங்க. (அப்பா அஜீத்திடம்) ஐயா! கொஞ்சம் திரும்பி படுங்க.

ஏடாகூடம் ப்ரோக்ராம்
எம்.ஜி.ஆர். உடனான பேட்டியில்

எம்.ஜி.ஆராக நம்ம சுவாமிநாதன்.

பேட்டி எடுப்பவர்: எங்க ஸ்டூடியோவுக்கு வருக என வரவேற்கிறேன். வணக்கம் சார்.
எம்.ஜி.ஆர்: வணக்கமெல்லாம் இருக்கட்டும். ஸ்டூடியோன்னு சொன்னியே. எது ஸ்டூடியோ?
பேட்டி எடுப்பவர்: இது தான் தலைவரே ஸ்டூடியோ.
எம்.ஜி.ஆர்: எது? இது ஸ்டூடியோவா? ஏம்பா கேமரா மேன். கேமராவ அந்த பக்கம் கொஞ்சம் திருப்பு.
(கேமராமேன் திருப்புகிறார்).
எம்.ஜி.ஆர்: அப்படியே இப்படி திருப்புங்க.
(கேமராமேன் இந்த பக்கம் திருப்புகிறார் திருப்புகிறார்).
எம்.ஜி.ஆர்: பாத்தியா? ஒரு சின்ன மோட்டார் ரூம்ல சோப்பா போட்டு உக்காத்திவெச்சுட்டு இத ஸ்டுடியோன்னு சொன்னா, ஏ.வி.எம் ஸ்டுடியோவ என்னான்னு சொல்லுவ?
பேட்டி எடுப்பவர்: கோவிச்சுக்காதீங்க தலைவரே. நீங்க அடிக்கடி விவசாயத்த பத்தியே பேசரீங்களே. அப்படி விவசாயத்துக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம்?
எம்.ஜி.ஆர்: ஆங். பம்மல்.கே.சம்பந்தம்.

எம்.ஜி.ஆர்: சிக்கு மங்கு சிக்கு மங்கு கெக்க பப்பா…சிக்கு மங்கு சிக்கு மங்கு கெக்க பப்பா…
பேட்டி எடுப்பவர்: தலைவரே! ஓல்டு மங்க் தெரியும் அதென்ன சிக்கு மங்கு?
எம்.ஜி.ஆர்: சிக்கு மங்குன்ன தெரியாதா?
பேட்டி எடுப்பவர்: தெரியாதே!
எம்.ஜி.ஆர்: அப்போ என்ன வேணும்னாலும் சொல்லலாம். சிக்கு மங்குன்ன சிக்கு…மங்கு.
பேட்டி எடுப்பவர்: புரிஞ்சுடுச்சு. புரிஞ்சுடுச்சு.
எம்.ஜி.ஆர்: என்ன புரிஞ்சுடுச்சு.
பேட்டி எடுப்பவர்: சிக்கு மங்குன்ன அர்த்தம் என்னான்னு உங்களுக்கும் தெரியாதுன்னு புரிஞ்சுடுச்சு.

எம்.ஜி.ஆர்: குடிச்சு வண்டி ஓட்டினதுக்கு எம்.ஜி.ஆர் பேட்டி எடுப்பவருக்கு அறை கொடுத்து,
பேட்டி எடுப்பவர்: ஏண்டா எவ்வளவு குடிச்ச?
எம்.ஜி.ஆர்: ஒன்றறை ஃபுல் தலைவரே.
பேட்டி எடுப்பவர்: ஏண்டா! குடிச்சதும் இல்லாம என் கிட்டேயே ஒன்டர்புல், பியூட்டிபுல்ன்னு சொல்லுறியா?

அடுத்து மனோகருடன் பேட்டி.
பேட்டி எடுப்பவர்: மிஸ்டர் கிங்கினி மிங்கினி, ரொம்ப டென்ஷன் பன்னாதடா. ஏண்டா இப்படி இருக்க?
மனோகர்: நான் என் அம்மா ஜாட. அதான் இப்படி இருக்கேன். எங்க அப்பா ஜாடையா இருந்தா, வேறறறறற மாதிரி இருப்பேன்…
பேட்டி எடுப்பவர்: இப்படி டென்ஷன் பன்னாதீங்க. கேக்குற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. எங்க படிச்ச?
மனோகர்: நான் எங்க படிச்சேன்?
பேட்டி எடுப்பவர்: அதாண்டா கேக்குறேன், எங்க படிச்ச?
மனோகர்: அதான்டா சொல்றேன் நான் எங்க படிச்சேன்?
பேட்டி எடுப்பவர்: டேய் எங்கடா படிச்சே?
மனோகர்: சனியன் பிடிச்சவனே நான் எங்கடா படிச்சேன்? ஸ்கூலுக்கே போகல.
பேட்டி எடுப்பவர்: ஏண்டா ஸ்கூலுக்கு போகல?
மனோகர்: ஸ்கூல் தூஊஊஊஊரத்துல இருக்கு. அதான் போகல.

அடிக்கடி இரவில் டாக்டர்கள் ப்ரோக்ராம் வருமே, அதை கிண்டல் பன்னி ஒரு முறை
சார்! நம்மகிட்ட கேள்வி கேட்டு நிறைய லெட்டர்கள் வந்திருக்கு. படிக்கிறேன்.
(முதல் கடிதம்) “உங்க ப்ரோக்ராம பார்த்தேன் நல்லா இருக்கு”
டாக்டர் (சுவாமிநாதன்): அட்ரஸ் தப்பா அனுபிட்டான். கரெக்ட் அட்ரஸ் பாத்து அனுப்பிடு.
(அடுத்த கடிதம்) “உங்க ப்ரோக்ராம் நல்லா தேனே போய்கிட்டிருக்கு, அப்புறம் எதுக்கு நடுவில ரெண்டு பேரு வந்து மொக்க போட்டிட்டுருக்காங்க. அதுவும் அம்மன் டி.ஆர்.முருக்கு கம்பிகள் பாட்டுக்கு வந்து ஆடுவாரே அவரு சூப்பரா ஆடுவாரு. இப்படி நல்ல நல்ல பாட்டா போடலாமே?”-ன்னு ஒருத்தர் கேட்டிருக்கார்.
டாக்டர்: அட மூதேவி! நாங்க ரெண்டு பேரு வந்து பேசுறது தாண்டா ப்ரோக்ராமே. நடுவுல வர்றது அட்வர்டைஸ்மென்ட்டா!!! சரி அடுத்த கேள்வி.
(டேபிளுக்கு அடியில் இருந்து ஒருவர் எழுந்து) கேள்வி அவ்வளவு தான். நானும் எவ்வளவு தான் எழுதரது. கை வலிக்குது. இந்த மூதேவி எவ்வளவு லெட்டர் எழுதினாலும் வேக வேகமா படிச்சுடுது.

ஒரு கேள்வி-பதில் லொள்ளு சபாவில்,

ஜீவா: யாருக்கு தெரியும்?
மனோகர்: எனக்கு தெரியும்.
ஜீவா: யாரு?
மனோகர்: யாருக்குத் தெரியும்னு எனக்கு தெரியும்.
ஜீவா: சரி! யாருக்கு தெரியும்?
மனோகர்: யாருக்கு தெரியும்!!!
ஜீவா: அதான் நாயே யாருக்கு தெரியும்?
மனோகர்: அதான் சொல்றேன் யாருக்கு தெரியும்!!!

(ஆனால், இதில் ஒரே அருவருக்கத்தகுந்த இரட்டை அர்த்த வசனங்கள். கேட்க சகிக்கவில்லை. அதுவும் அந்தாக்க்ஷரியில்…)

நாயகன்

மனோகர்: நாயக்கரே! நாயக்கரே!!
வேலு நாயக்கர்: என்னடா?
மனோகர்: போலீஸ்காரங்க என்கிட்ட நீங்க எங்க இருக்கீங்கன்னு கேட்டாங்களா, நான் எனக்கு தெரியாதுன்னு சொல்லி ஓஓஓஓஓடி இங்க வந்துட்டேன். போலீஸ்காரங்க என்ன தொறத்திட்டு வர்றாங்கோஓஓஓஓ…
வேலு நாயக்கர்: டாய்! தெரியாதுன்னு சொல்லி ஏண்டா இங்க வந்தே? இப்போ போலீஸ் வந்து நம்மள எல்லாரையும் பொடிச்சுட்டு போகப்போறாங்கோ.
மனோகர்: நாயக்கரே! நான் வேணும்னா அவங்ககிட்ட நீங்க மளிகை கடைக்கு முடிவெட்ட போயிருக்கீங்கன்னு பொய் சொல்லி அவங்கள அனுப்பிடட்டா?
(அதற்குள் போலீஸ் வந்துவிட, வேலு நாயக்கர் மனோகர் பின் ஒளிந்துகொள்ள…)
போலீஸ்: அசையாதீங்க. அசைஞ்சா நான் சுட்டுடுவேன்.
மனோகர்: நாயக்கரே! அசையாதீங்கோ…அசைஞ்சா சுட்டுடுவாங்கோஓஓஓஓஓ!!

டாக்டர்: வாங்க. என்ன ப்ராப்ளம்?
மனோகர்: சிம்புவுக்கும் நயன்தாராவுக்கும் ப்ராப்ளம். தீத்துவைக்க போறீங்களா?

லொள்ளு சபா வீடியோக்களின் சுட்டிகளை அனைத்தும் இந்தப் பதிவு தொகுத்து வழங்கி வருகிறது …
www.desipundit.com/2007/03/15/lollusabha

18 comments மே 7, 2007

"இந்தியா 250+ எடுக்கும்"-னு வங்கதேச கேப்டன் நம்பினார்

ரொம்ப நாளைக்கு அப்புறம் கிரிக்கெட் பாக்கலாம்னு நேத்து எல்லா வேளையும் அவசரம் அவசரமா முடிச்சுட்டு உக்காந்தேன். சரி! வழக்கம் போல முதல் மேட்ச சொதப்பிட்டு, தத்தம் வீடுகளில் ரசிகர்களின் கல்லடிகளோடு, அடுத்தடுத்த ஆட்டங்களில் தானே நம்மாளுங்க ஜொலிப்பார்கள்? அதனால், அதற்கேற்ப மனதளவில் என்னை தயார் செய்துகொண்டு தான் ஆட்டத்தை பார்க்க உட்கார்ந்தேன்.

டாஸ் போடப்பட்டு திராவிட் இந்தியா பேட்டிங் செய்யும் என்று தெரிவித்து நகர, வங்கதேச கேப்டனிடம் டாஸ் குறித்து கேட்க, அவர் 250+ என்பது டிஃபண்டபல் ஸ்கோர் என்றார். அதாவது, இந்தியாவை குறைந்தபட்சம் 250 ரண்களுக்குள் கட்டுப்படுத்த விரும்புவதாக கூறினார். அவ்வளவு கான்ஃபிடன்ட் இந்திய அணி மீது.

ஆட்டம் ஆரம்பமானது. முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்திருக்க வேண்டும். எல்லாம் நம்ம திராவிட் ரெக்கமண்டேஷனில் உள்ளே வந்த சேவாக் தான். எப்படி? க்ரீஸை நெருங்கி விட்டாலும் பேட்டை கோட்டில் வைக்காமல், ஏதோ சோத்துக்கு செத்தவர் மாதிரி ஒரு பொருப்பின்மையோடு அந்திரத்தில் பேட்டை கொண்டு சென்றார். ‘மயிரி’ழையில் தப்பித்தார். மேற்கு இந்திய உலகக் கோப்பைக்கு ஒரு சக பயணியாகத்தான் போயிருக்கிறார், டீம் இந்தியாவில் இல்லை போலும். சரி! முதல் இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தது. அதனால் என்ன? கான்ஃபிடன்ட் வேண்டாமா? வெற்றி அல்லது வீர மரணம் என்பது இரு வேறு நிலை. சரண்டர் ஆவது போல விளையாடினால் என்ன அர்த்தம்? ஐயா! தோற்கலாம் தப்பில்லை. சரண்டர் ஆவதா? அதுவும் கடைசியில் 2 ரண்களில் 5 விக்கெட்கள்.

இதில் குறிப்பிடப்படவேண்டிய அம்சம், வங்கதேச அணியின் துல்லியமான பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங். ஒரு சாம்பியனை போல விளையாடினார்கள். அவ்வளவு கான்ஃபிடன்ட். சமீபத்தில் பெரிய அணிகளையெல்லாம் வென்றிருக்கிறார்கள். இந்தியா 250 எடுக்கும் என்ற வங்கதேச கேப்டனின் கான்ஃபிடன்ட் கூட நம்ம ஆட்களுக்கு இல்லை என்னும் பொழுது என்ன சொல்ல? உலகக் கோப்பையை இப்படிபட்ட ஒரு அணியா வெல்ல வேண்டும்? அந்த ஆசையே போய்விட்டது. தென் ஆப்ரிக்கா வென்றால் மிகுந்த சந்தோஷம் அடைவேன். அவர்கள் கோப்பையை வெல்ல முழு தகுதி உள்ளவர்கள். ஆஸ்திரேலியா…போதும். இத்தோட நிறுத்திகிடுவோம்.

இவ்வளவு நடந்த பிறகும் ஒரே ஆறுதல், நம் சக நண்பன் பாகிஸ்தானில் நிலை (!). கடுப்பாகி சோனி பிக்ஸ்-ல் ஒளிப்பரப்பான பாகிஸ்தான் மேட்சை பார்த்தால் அங்கே 58/6. ஆகா. நம்ம நெலைமையே பரவாயில்லையேன்னு தான் நினைக்க தோனினது. இதில் ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்தது. அதாவது, நம்மாளுங்க வீட்ல புலி, வெளியில எலி என்பது. (வங்கதேசம் வென்றது இந்தியாவை, மற்றொரு துணை கண்ட புலி).

அயர்லாந்து பன்னின லந்தில் பாகிஸ்தான் காணாமல் போனது. அவர்களின் ப்ளஸும் பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங். இன்டர்நேஷனல் கிரிக்கெட்டுக்கு அவர்கள் புதுசு. பாகிஸ்தானை வென்றால் அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அயர்லாந்து பேட்டிங் செய்யும் பொழுது ஒரு கட்டத்தில் 40+/2 என்று இருந்தது. அப்பொழுது ரண் எடுக்க ஓடும் பொழுது ஒரு ஓவர் த்ரோவில் ரண் எடுக்கும் வாய்ப்பு வந்தது. பாகிஸ்தான் ஃபீல்டர் ஒருவர் எரிந்த பந்து பேட்ஸ்மேனின் மட்டையில் பட்டு சென்றது. இருவர் மீதும் தப்பில்லை. அந்த ஓவர் த்ரோவில் ரண் எடுப்பது ஒன்றும் தப்பில்லை. ஆனால், அந்த அயர்லாந்து வீரை அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் அமைதியாகவே இருந்தார். உண்மையிலேயே கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் தான். இந்த இரு அணிகளிடமும் நம்மவர்கள் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.

ஒன்று மட்டும் வேதனையான உண்மை. இந்தியா மட்டும் கோப்பையை வென்றால், அது நிச்சயம் கோப்பைக்கு அவமானம். இவர்கள் வெல்ல வேண்டுமா?

11 comments மார்ச் 18, 2007

‘சாம்பலாகக் கடவாய்’ – ஒரு விஞ்ஞான பார்வை

ஒருவருடைய உடல் படுக்கையில் எலும்பு முதற்கொண்டு சாம்பலாக எரிந்து கிடக்க, அவர் படுத்த அந்த படுக்கை மட்டும் எந்த வித சேதாரமும் இல்லாமல் இருக்க முடியுமா? உடல் முழுவதும் எரிந்தாலும், ஒருவர் கழுத்தில் இருக்கும் மஃப்ளார் மட்டும் எரிந்து போகாமல் இருக்க முடியுமா? முடியும். “Spontaneous human combustion” சுருக்கமாக “SHC”, தமிழில் “நெருப்பு மரணங்கள்”, என்பது விஞ்ஞானபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படாத, கற்பனை என்றே எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு கருத்து. இது விஞ்ஞான உலகுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது. “நெருப்பு மரணங்கள்” சொல்வது, உடலுக்கு வெளியில் இருந்து நெருப்பிடப்படாமல், ஒருவருடைய உடலிலுக்குள்ளே இருந்து வரும் நெருப்பே அவரை கொல்வது. கொல்வது என்றால் சாதாரணமாக அல்ல. 640 டிகிரி செல்சியஸில் ஒருவருடைய உடல் முற்றிலும் சாம்பலாக குறைந்தது 4 மணி நேரமாவது தேவைப்படும். ஆனால், 20 முதல் 60 நிமிடங்களில்(!) இப்படி உடல் முற்றிலும் எரிந்து, எலும்பு முதற்கொண்டு, சாம்பலாக முடியுமா? அப்படிப்பட்ட நெருப்பு, வெளியில் இருந்து உடலில் செலுத்தப்படாமல், உடலுக்குள்ளே இருந்து கிளம்பினால்…? அது தான் இந்த “நெருப்பு மரணங்கள்”. ஆனால், இது வெளியில் இருந்து பற்ற வைக்கப்பட்ட நெருப்பு மட்டும் அல்ல என்று விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர். இது அரிதிலும் அரிதான ஒன்று. அதனால், பயப்படவேண்டாம் (ஏன்னா? நான் பயந்தேன்). ஆனால், அதனை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

இது வரை உலகில் 300 வருடங்காளில் 200க்கும் அதிகமாக இத்தகைய மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன, முதல் மரணம் பதியப்பட்டது 1663-ல். அதுவும் மனிதனுக்கு மட்டுமே…!!! அதனால் சோதனையும் செய்ய முடியாது. நேரடி சாட்சிகள் மட்டுமே உண்டு. அதுவும் மிக அரிதாகவே. காரணம், இது திடீரென்று நிகழ்ந்து விடுவதால். பிரிட்டனில் வருடத்திற்கு 5 மரணங்கள் இவ்வாறு நிகழ்கின்றன. உலகம் முழுவதும் வருடத்திற்கு 50 பேராவது இவ்வாறு இறகின்றனர்.

“நெருப்பு மரணங்கள்”-க்கான அறிகுறிகள்.

* நெருப்பு எந்த ஒரு வெளிதொடர்பில்லாமல் வெளிப்பட்டிருப்பது.

* நெருப்பானது பாதிக்கப்பட்டரின் உடலை தவிற, அருகில் இருக்கும் வேறு எந்த ஒரு பொருளுக்கும் சேதாரம் விளைவிக்காமல் இருப்பது.

* வழக்கமாக நெருப்பினால் ஏற்படும் மரணங்களை விட அதிக அளவில் உடல் எரியப்பட்டிருக்கும்.

* இந்த மரணங்கள் பெரும்பாலும் உள்ளரங்கில் நடைபெற்றிருக்கின்றன (வீடு, அறை…)

* கடும் சூட்டினால், அந்த நெருப்பை தாண்டியுள்ள பொருட்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

* நெருப்பு மரணங்களில் இறந்தவர்கள் பெரும்பாலும் வயதானவர்கள்.

* வழக்கமாக நெருப்பினால் ஏற்படும் மரணங்களில் உடல் தவிற மற்ற பாகங்கள் எரிந்து விடும். ஆனால், நெருப்பு மரணங்களில் இறந்தவர்களின் உடல் மட்டுமே பெரும்பாலும் எரிந்தும், மற்ற பாகங்களான தலை, கை, கால்கள் ஆகியன கொஞ்சமும் பாதிக்கப்படாமல் இருந்திருக்கின்றன.

“இது வரை உலகில் 300க்கும் அதிகமாக இத்தகைய நெருப்பு மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், இது வெளியில் இருந்து பற்ற வைக்கப்பட்ட நெருப்பு மட்டும் அல்ல என்று விஞ்ஞானிகள் அடித்து சொல்கின்றனர்.”

விஞ்ஞானம் எப்படி விளக்குகிறது? ஒரு விளக்கம்: ‘மெழுகுவர்த்தி’ பற்றிய கற்பனை (the ‘wick effect’). மெழுகுவர்த்தி ஆனது உள்ளே திரியை கொண்டு எரிகிறது. அந்த திரியை சுற்றியுள்ள மெழுகை கொண்டு எரிகிறது. மெழுகிவர்த்தி எரிந்தவுடன் அதன் திரியும் கூடவே எரிந்து விடுகிறது. அதே போல, மனித உடலுக்கு அவனுடைய எழும்புகள் திரியாகவும், உடலில் உள்ள கொழுப்புகள் மெழுகாகவும் இருக்கின்றது. மெழுகிவர்த்தி எரிந்து முடிய 1 மணிநேரம் கூட ஆகிறது. ஆனால், நெருப்பு மரணங்களின் படி 20 – 60 நிமிடங்களில் எல்லாமே முடிந்து விடுகிறது.

மெழுகுவர்த்தி எபெஃக்டை விளக்க ஒரு பன்றியை போர்வையில் சுற்றி, கொஞ்சம் போல பெட்ரோலை ஊற்றி எரித்தார்கள். நெருப்பு மரணங்கள் என்னவெல்லாம் செய்யுமோ அவற்றை நேரடியாக செய்து காண்பித்தார்கள்.


இதன் படி எடுக்கப்பட்ட முடிவுகள்:

* இது மெல்ல, சீறாக நடக்கக்கூடிய முறை. அதனால் 5 முதல் 10 மணி நேரங்கள் பிடிக்கும். மேலே குறிப்பிடப்பட்ட பன்றி எரிய 7 மணி நேரங்கள் ஆனது, ஆனாலும் முழுவதுமாக எரிந்து முடியவில்லை.

* நெருப்பு மரணங்கள் ஏற்பட ஏதேனும் ஒரு சிறு நெருப்பு பொறியாவது தேவைப்படுகிறது. தீக்குச்சி, சிகரெட், எரிபொருள், ஸ்பார்க், பெர்ஃப்யூம், சாராயம் போன்றவை.

* இது மெல்ல, சீறாக உடம்பில் உள்ள கொழுப்பை எரிப்பதால், இதனால் இரையாக்கப்பட்டவர் கட்டாயம் இறக்கிறார்.

நெருப்பு மரணங்களில் இறந்தவர்களில் சில (கவனிக்க, வேறு வழியில்லாமல் ‘நெருப்பு மரணங்கள்’ என்று முடிவு கட்டப்பட்டவர்கள் இவர்கள்)

1) மேலே இருக்கும் ஹெலன் கான்வே என்னும் பெண்மனி, சில் வருடங்களுக்கு முன் எல்லோர் முன்பும் எரிந்து போனார். அது ஒரு நெருப்பு மரணம் என்பதற்கான அறிகுறிகளை தீயனைக்கும் படையில் இருந்த ஆர்னால்ட் என்னும், நெருப்பு மரணங்களை பற்றி ஓரளவேனும் தெரிந்த, இளைஞர் நுணுக்கமாக விசாரித்தார்.

கான்வே வயதான பெண்மனி. அவர் ஒரு தொடர்ந்து புகை பிடிப்பவர். எரிந்து போன பல சிகரெட் துண்டுகள் அவர் அறையில் இருந்தன. 1964 நவம்பர் 8ம் தேதி, நெருப்பு மரணம் அவரை தழுவும் பொழுது ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தார். அவரின் இரண்டு கால்கள் மட்டுமே மிஞ்சியிருந்தன. அவர் சாம்பலாக எடுத்துக் கொண்ட நேரம் 21 நிமிடங்கள் என்று ஆர்னால்டு ஊகித்திருந்தார். அவரே கான்வே வெறும் ஆறே நிமிடத்தில் சாம்பலாகியிருக்கவும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார். காரணம், நெருப்பு பிடிப்பதற்கு மூன்று நிமிடத்திற்கு முன்பு தான் கான்வேயின் பேத்தி பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தாள். பின் அதன் 3வது நிமிடத்தில் தீயனைப்பு துறைக்கு சொல்லப்பட்டது. தீயனைக்கும் துறை வந்து சேர்ந்தது மற்றொரு 3 நிமிடத்தில்.
இந்த பெண்மனி இறக்கும் பொழுது, நெருப்பு அவரின் இருக்கைக்கு அடியில் இருந்து கிளம்பி மேல் நோக்கி எரிந்திருக்கலாம் என்றும், அவர் உடலில் இருந்த அபரிமிதமாக கொழுப்பு அந்த நெருப்பு மேலும் கொழுந்து விட்டெரிய காரணம் என்றும் பின் எரிந்து மிச்சம் இருந்த ‘வஸ்து’வில் வழவழப்பான ஒரு திரவம் இருந்ததாகவும் (கொழுப்பின் மிச்சம்) கூறுகிறார். இதில் கவனிக்க வேண்டியது, அவர் சாய்ந்திருந்த முதுகு புறத்தில் இருந்த நாற்காலியின் பாகம் மட்டுமே எரிந்திருந்தது.

2) மற்றொரு சாட்சி, 1982-ல் லண்டன் எட்மான்டன்-ல், 62 வயதான ஜேன் சஃப்பின் என்ற மன நிலை பாதிக்கப்பட்ட பெண்மனியின் நெருப்பு மரணம். அவர் எரிந்தது அவரின் தந்தை மற்றும் உறவினரின் கண்ணெதிரில். எரிந்து பிற்பாடு மருத்துவமனையில் இறந்தார். அவர் தந்தை ஜேனின் மிக அருகில் அமர்ந்திருந்தார். திடீரென்று அவர் கண்களில் பளிச்சென்று ஒரு ஒளிப்பிழம்பு தெரிந்தது. ஜேனின் முகம் மற்றும் கைகளை சுற்றி நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அவர் தந்தை கூறியது, கேன் கதறவோ அல்லது நகரவோ இல்லை என்றும், மாறாக அவர் தன் கைகளை அமைதியாக மடியில் வைத்து அமர்ந்திருந்ததாகவும் கூறினார். பின் அவர் தந்தை மற்றும் மருமகன் ஆகியோர் சேர்ந்து அவரை சமையலரையில் தண்ணீரின் அருகில் இழுத்து சென்று தீயை அனைத்தார்.

இதில் கவணிக்க வேண்டியது, அந்த சமையலரையில் எந்த பொருளும் நெருப்பினால் பாதிக்கப்படவில்லையென்றும், அவரின் உடையும் நெருப்பினால் பாதிக்கப்படவில்லையென்றும் கூறினர். மேலும் சாட்சிகளில் கூற்றுப்படி, அவர் உடலில் இருந்து வந்த நெருப்பின் புகை ஒரு மாதிரியான உருமல் சத்தத்துடன் வந்தது. ஜேன் மருத்துவமணையில் சுயநினைவோடு இருந்ததாகவும், ஆனால், அவரால் எதையும் பேச முடியவில்லை.8 நாட்கள் கோமாவின் இருந்து பின் இறந்தார். பின் விசாரணையில் ஜேன் நெருப்பு மரணத்தினால் தான் இறந்திருப்பார் என்று ஊகிக்கப்பட்டது.

3) 1967, செப்டம்பர் 13ம் தேதி, அதிகாலை, இலண்டனில் உள்ள லாம்பெத்-ல், 49 ஆக்லாந்து சாலையில் உள்ள ஒரு வீட்டில் இருந்து பளிச்சென்று வெளிச்சம் வந்தது. காலை 5:19 மணிக்கு ஒருவர் தீயணைக்கும் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 5:24-க்கு தீயணைக்கும் துறையினர் வந்தனர். அங்கு ராபர்ட் பெய்லி எரிந்து கொண்டிருந்த நிலையில் கண்டனர். ஆச்சர்யபடுத்தும் விதமாக, அந்த வீடோ அல்லது வீட்டில் இருந்த எந்த பொருளோ நெருப்பினால் பாதிக்கப்படவில்லை. அங்கே எரிந்து கொண்டிருந்த ஒரே பொருள்(!) ராபர்ட் பெய்லி மட்டுமே.

பார்த்தவர்கள் கூறியபடி, அவர் வயிற்றில் நான்கு இன்ச்க்கு ஒரு வெட்டு இருந்ததாகவும், அந்த வெட்டில் இருந்து மிக வேகமாக நீல நிற தீஜ்வாலைகள் வந்ததாகவும் கூறினர். அவர் படியில் இடது புறமாக திரும்பி படுத்துக்கொண்டிருந்ததாகவும், அவர் கால்களை மடக்கி வைத்திருந்து வலியில் புரண்டு கொண்டிருந்ததாகவும் கூறினர். தீ அவர் உடம்பில் இருந்து தான் வந்தது. வேறெங்கிலிருந்தும் இல்லை.

பெய்லியின் உடம்பில் இருந்த உடை, நெருப்பு வெளிவந்த அடி வயிற்றை தவிற மற்ற பகாங்களில் எந்த வித சேதாரமும் இன்றி இருந்தது. அவர் உடல் இருந்த படியில் மட்டும் சிறு துளை இருந்தது. அது நெருப்பினால் ஏற்பட்ட துளை. அந்த வீட்டில் மின்சாரமும் கேஸும் நிறுத்தப்பட்டிருந்தன.

இங்கு கவணிக்க வேண்டியது, தீயணைக்கும் துறை ஐந்து நிமிடத்தில் அங்கு வந்துவிட்டது. அவர் உடலிலும் நெருப்பு வந்த இடம் தவிற வேறு எந்த எடத்திலும் தீக்காயம் இல்லை. நெருப்பும் நீல தீப்பிழம்பு. அதனால், மெழுகுவர்த்தி (wick effect) பாணி கற்பனையும் இல்லை.

4) மிக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் 1998 ஆகஸ்டு 24ம் தேதி ஸிட்னியில் நடந்தது. இந்த சம்பவத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சாட்சிகள் உண்டு என்பதும் பாதிக்கப்பட்டவர் சிறிது காலம் வாழ்ந்தார் என்பதும் சிறப்பம்சம். அவர் பெயர் ஏக்னஸ் பிலிஃப். ஒரு காரில் அமர்ந்திருந்தார் ஏக்னஸ். திடீரென்று ஏக்னஸின் மகள் ஜாக்கி காரில் இருந்து புகை வருவதை பார்த்தார். ஒரு வழிப்போக்கர் காரிலிருந்த ஏக்னஸை வெளியே இழுத்து போட்டார். தீ அணைக்கப்பட்டது. ஏக்னஸிடமிருந்து வெறும் முனகல் சத்தம் மட்டுமே கேட்டது. அவருடைய மார்பு, அடிவயிறு, கழித்து, கை, கால்கள் ஆகிய இடங்களில் அதிக தீப்புண்கள் ஏற்பட்டன. ஒரு வாரம் கழித்து மருத்துவமணையில் இறந்தார் ஏக்னஸ்.

விசாரணையில் தீ எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதாவது, வெளியில் இருந்து தீ வரவில்லை. காரின் எந்த மின்கசிவோ அல்லது பெட்ரோல் கசிவோ இல்லை. ஆனால், ஒரு வித்தியாசம், மற்ற நெருப்பு மரணங்களை போல தீ வெகுநேரம் நீடிக்கவில்லை. மாறாக, ஒரு சில நிமிடங்களே நீடித்தன.

5) இந்த நெருப்பு மரணத்தின் வெகு அறுகாமையில் சென்று மீண்ட ஜீனா வின்செஸ்டர் என்ன கூறுகிறார்? 1980 அக்டோபர் 9-ம் தேதி தன் தோழியுடன் காரில் சென்று கொண்டிருந்த அவரை சுற்றி திடீரென்று நெருப்பு. அவர் தோழி தான் அவரை காப்பாற்றினார். கார் ஒரு தொலைபேசி பூத்தை மோதி நின்றது. உயை பிழைத்துவிட்டார். உடம்பில் 20 சதவிகிதம் காயம். காவல்துறை விசாரணையில் வழக்கம் போல அவரை சுற்றி எந்த பிரச்சினையும் இல்லை. ஜீனா சொல்வது அவரால் எதையும் நியாபகப்படுத்த முடியவில்லை என்பது…

சரி! இதிலிருந்து தப்பித்த சிலர் கூறுவது?

1) ஜாக் ஏஞ்சல் – நான்கு நாட்கள் தூங்காமல் கண் விழித்த இவர், பின் தூங்க போயிருக்கிறார். தூக்கத்தில் தன் மார்பில் ஒரு வெடிப்பு ஏற்பட்டதாகவும், அதில் ஒரு ஓட்டை விழுந்ததாகவும், பின் தன் புட்டங்கள் எரிந்து விட்டதாகவும் கூறுகிறார். அவர் வலது கையில் மணிக்கட்டு முதல் விரல்கள் வரை வீக்கங்கள் இருந்ததாகவும், எந்த வலியும் தெரியாததால், வழக்கம் போல குளித்தல், உடை அனிதல் போன்ற வேலைகளை செய்திருக்கிறார். பின் அவர் தம் ஹோட்டலில் மயங்கி விழுந்திருக்கிறார். இவருக்கு தன் உடம்பு எரிந்தது, பிறகு மருத்துவமணையில் கண் விழித்தது, அதன் பிறகு தான் வலி தெரிந்திருக்கிறது. மருத்துவர்களால் இதை விளக்க முடியவில்லை.

2) வில்ஃபிரட் கெளதோர்ப் – சமையலறையில் விழுந்து கிடந்த இவர், ஸ்ட்ரோக் அடிக்கப்பட்டுவிட்டதாக நினைத்து மருத்துவமணைக்கு கொண்டுவரப்பட்டார். ஆனால், மருத்துவர் இவருக்கு ஸ்டிரோக் இல்லையென்றும், அவர் கை மிக மோசமாக எரிந்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அவர் கையை மூடியிருந்த உடைகள் எதுவும் தீயால் பாதிக்கப்படவில்லை. இதில் முக்கியமாக, அவருடைய கையில் பெருவிரல் எரிய வில்லை என்பது தான். அவர் தற்கொலையும் முயற்சிக்க முடியாது. காரணம், அவர் அப்படி செய்திருந்தால் அது அவர் உயிருக்கே ஆபத்தாக இருந்திருக்கும். ஆனால் இந்த காயங்களை பார்த்தால் அவர் தற்கொலை முயற்சி செய்திருக்கவில்லை என்று கூறினர். பதினைந்து வாரங்கள் மருத்துவமணையில் இருந்தார் அவர். ஆனால், கெளதோர்ப்பால் என்ன நடந்தது என்று நினைவுப்படுத்த முடியவில்லை. பின் பதினெட்டு மாதங்கள் கழித்து இறந்தார்.

இவைகள் ஒரு பக்கம் என்றாலும், மற்றொரு பக்கம், SHC என்பது ஒரு மாயை (Myth) என்றே கூறுகின்றனர். உடம்பில் நாம் சாப்பிடும் பொருட்களால் சில வாயுக்கள் உருவாகிறதென்றும், அந்த வாயுக்கள் தீப்பிடிப்பதால் இது நிகழ்கிறது என்கின்றனர். அதனால், இவற்றை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் கூறுகின்றனர். மேலும், இந்தகைய மரணங்களில் ஏன் கால்கள் மட்டும் எரியாமல் இருக்கின்றன? இந்த கேள்விக்கு பொத்தாம் பொதுவாகவே விடை கிடைக்கின்றன. தீயினால் ஏற்படும் மரணங்களில் சில இப்படி, கால்கள் மட்டும் விடுபட்டு, நிகழலாம் என்றும் அவற்றை கண்டுகொள்ள தேவையில்லை என்றும் கூறுகின்றனர்.

சில ஒற்றுமைகள்:

* இறப்பவர்கள் பெருன்பாலும் வயதானவர்கள்.

* பெரும்பாலும் புகை பிடிக்கும் பழக்கம், மது அருந்தும் பழக்கம், அசைவம் உண்பவர்களாக உள்ளவர்கள்.

* பெரும்பாலும் சாட்சி இல்லாமல் நிகழ்கின்றன (திடீரென்று நடப்பதாலும் இருக்கலாம்).

* பாதிக்கப்பட்டவர் உடனடியாக இறக்கிறார்.

* சிறு தீப்பொறி எப்பொழுதும் தேவைப்படுகிறது.

* மெழுகுவர்த்தி எஃபெக்ட் நடக்கிறது.

* அனைவரும் சாம்பலாகின்றனர்.

* பெரும்பாலும் உள்ளரங்கில் நடக்கிறது.

நம் ஊரிலும் இவைகள நடந்திருக்கலாம். ஆனால், நமக்கு அது தெரியாமல் போகிறது. கிராமத்தில் வைக்கோல் போர்களில் ஏற்பவும் தீயை SHC-யுடன் ஒப்பிடலாம். காரணம், சூடான காற்று வைக்கோல் போர்களில் மோதும் பொழுது அவை உள்ளுக்குள் சூடேரி திடீரென்று பற்றி கொள்கிறது.

நெருப்பு மரணங்கள் எப்படி வேலை செய்கிறது என்பதின் 3 நிலைகளை இங்கே பாருங்கள்:

புள்ளி விவரங்கள்:

1950-களில் – 11 வழக்குகள்

1960-களில் – 7 வழக்குகள்

1970-களில் – 13 வழக்குகள்

1980-களில் – 22 வழக்குகள்

The remains of Dr John Irving Bentley, who possibly dies of spontaneous human combustion at his home in Northern Pennsylvania, USA, on 5 December 1966.

மற்ற புகைப்படங்கள்

அறிவியலும், வானவியலைப் பற்றியும் என் மற்ற பதிவுகள்

அணுப்பிளவு (Nuclear Fission)

கால இயந்திரம்

E = MC2

கருந்துளைகள்

1-D, 2-D, 3-D, 4-D…

விண்கற்கள்

The Expanding Universe

அறிவியல் – வரமா / சாபமா?

11 comments மார்ச் 1, 2007

முத்தமிடுதல்

வரலாறு

முத்தங்களை பற்றின வரலாறு கடவுளைப்போல, ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. முத்தங்களின் வரலாறு தெரியவில்லை. கி.மு.1500-க்கு முன் எழுதப்பட்ட வேதங்கள் முத்தங்களின் பரிமாற்றத்தினை விளக்குகின்றனவாம். அப்படியானால் அதற்கு முன் முத்தங்கள் இல்லையா? கட்டாயம் இருந்திருக்கும். ஆனால், அன்றைய கலை மற்றும் இலக்கியம் முத்தத்தினை ரகசியமாக வைத்திருந்தது என்றே கூறலாம்.

மகாபாரதம் உதட்டில் முத்தமிடுவதை அன்பின் அடையாளமாக விவரிக்கிறது. கி.பி. 350 வரை மகாபாரதம் வாய்மொழியாகவே கற்பிக்கப்பட்டது. கி.பி. 6ம் நூற்றாண்டில் எழுத்தப்பட்ட வாத்ஸ்யாயன காமசூத்திரமும் பல்வேறு முத்தப் பரிணாமங்களை விவரிக்கிறது. கி.மு.326-ல் அலெக்ஸாந்தர் இந்தியா மேல் போர் தொடுத்த பின்பு தான் கிரேக்கர்கள் முத்தங்களை பற்றி அறிந்துகொண்டார்கள் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளார்கள்.

ரோமானியர்கள் நண்பர்களையும், உறவினர்களையும் வாழ்த்த முத்தமிடுவார்கள். தங்கள் அரசரின் கைகளில் முத்தமிட்டனர். மூன்று வகையான முத்தங்களை ரோமானியர்கள் பரிசளித்தனர்:

1) Osculum – கன்னத்தில் முத்தமிட்டால்
2) Basium – உதட்டில்
3) Savolium – ஆழ்ந்த முத்தம்

ரோமானியர்களின் அந்த கால முத்தங்களின் வகைகள் இன்றும் வழங்கப் பெற்று வருகின்றன. திருமண நிச்சயம் நடைபெறும் பொழுது பொது மக்களின் முன்பு முத்தமிட்டுக் கொள்வார்கள். இது இன்று வரை தொடர்கிறது. பண்டைய ரோமானியர்கள் முத்தமிடுதலை தேர்தல்களிலும் பயன்படுத்தினர், “kisses for votes”.

கிருத்துவ தேவாலயங்களிலும் முத்தமிடுதல் முக்கிய பங்காற்றின. கிருத்துவர்கள் மற்றவரை வாழ்த்த கன்னத்தில் முத்தமிட்டனர். இது ஹோலி கிஸ். இந்த வழக்கத்தின் படி முத்தமிட்டுக் கொண்டவர்களின் ஊடே அவர்களின் ஆன்மா பரிமாறிக்கொள்வதாக நம்பினார்கள்.

எல்லா
முத்தங்களும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக இல்லை. ‘ரோமியோ ஜூலியட்’ காப்பியத்தில் தவறானவர்களிடம் பரிமாறப்படும் முத்தங்கள் கொடூரமானதாக சித்தரிக்கப்பட்டது.

முத்தம் இனி…

உதட்டு முத்தம் எச்சிலும், எச்சில் சுரக்கும் சவ்வு, எப்பொழுதோ மென்று சாப்பிட்ட உணவின் மீதம் கொண்டது. உதட்டு முத்தமிடலின் பொழுது இலட்சக் கணக்கான கிருமிகள் ஒரு வாய்க்குள் இருந்து மற்றொரு வாய்க்கு மாறும். சிற்சில வியாதிகள் பரவும். இருந்தாலும் 90 சதவிகித மக்கள் முதமிடுகின்றனர். காதலின் முதல் முத்தம், குழந்தைகளை பெற்றோர் முத்தமிடுதல், தலைவர்கள் / ஆன்மீகவாதிகளாஇ முத்தமிடுதல், ஜோடிகள் தங்களுக்குள் முத்தங்களை பரிமாறிக் கொள்ளுதல் போன்றவை அடக்கம். சிலர் தங்கள் மண்ணை கூட முத்தமிடுவர்.

முத்தமிடுதல் எப்படி ஆரம்பித்திருக்கலாம்? இது பொதுவாக தாய் தன் குழந்தைக்கு உணவூட்டும் பொழுதில் இருந்து வந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளார்கள் கருதுகின்றனர். தாய் தன் குழந்தைக்கு உணவூட்டுதல் என்பது, பறவை தன் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதை போல. தாய் உணவை நன்றாக மென்று பின் மெல்லப்பட்ட உணவை குழந்தைகளுக்கு முத்தம் மூலம் பரிமாரப்பட்டிருக்கலாம். குழந்தைகள் பின் திடமான உணாவை தானாக உண்ண கற்றுக் கொண்டபிறகு தாய் தன் குழந்தையின் மீதான அன்பை வெளிப்படுத்த / ஒரு பாதுகாப்பை உணரவைக்க முத்தமிட்டனர்.

முத்தமிடுதல் என்பது வழிவழியாக கொண்டு செல்லப்பட்ட ஒரு பழக்கம். நம் பெற்றோர்களிடமிருந்தும் சமுதாயத்திடமிருந்தும் நாம் கற்றுக் கொண்டது. முத்தமிடுதல் என்பது சுபாவம். மனிதனின் மூதாதையர்களான குரங்குகளுக்கும் இந்த பழக்கம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். விலங்குகள் பொதுவாக தன் குட்டிகளாஇ நாவினால் தடவி கொடுக்கும். இதுவும் ஒருவகை முத்தமிடுதலே. பறைவகள் தன் அலகாலும், நத்தைகள் தன் antenna-க்களாலும் உரசிக் கொள்ளும். இப்படி ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு மாதிரி முத்தமிடும் பொழுதும், அவை பொதுவாக தன் அன்பையும், அரவணப்பையும், காதலையும், நம்பிக்கையையும், உறவையும் வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. முத்தமிடுதல் என்பது கற்றுக் கொள்ளப்பட்டதாகவும், சுபாவமாகவும் விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்கிறார்கள்.

முத்தமிடுதல் ஏன் நல்லது?

1) பல் துலக்குவதை காட்டிலும் முத்தமிடுதல் பற்சிதைவை தடுக்கிறது. உணவை உட்கொண்ட பிறகு நம் வாய் நிறைய சர்க்கரை கரைசல்களும், உமிழ் நீரும் தங்கும். இவை தான் வாயில் கிருமிகள் உருவாக முதற்காரணம். முத்தமிடுதல் இந்த கிருமிகளை நீக்க இயற்கையான ஒரு முறை. முத்தமிடும் பொழுது வாயில் இருக்கும் உமிழ்நீர் ஒரு இடத்தில் தங்காமல் துப்புரவு செய்து கொண்டே இருப்பதால், வாயில் உருவாகும் கிருமிகளை கட்டுக்குள் வைக்கிறது.

2) மனச்சோர்வையும், டென்ஷனையும் தடுக்கிறது. முத்தமிடுதல் என்பது உங்களை நீங்களே ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் ஒரு நுட்பம், கூறுவது ஒரு மனநல ஆலோசகர். நம் உதடுகள் முத்தமிடும் நிலையில் இருக்கும் பொழுது நாம் பெரும்பாலும் புன்னகையுடனும், இருவரது உடலும் நெருங்கிய நிலையில் இருப்பதால் அந்த நிலையில் டென்ஷனுக்கு வழியில்லை. உங்கள் மூச்சும் ஆழமாகிறது. இமைகள் மூடப்படுகிறது. தியானம் அல்லது நம்மை நாம் ஆசுவாசுப்படுத்திக் கொள்ளும் பொழுதும் இந்த நிலையில் தானே இருக்கிறோம்? உலகத்தை வெல்ல இது மிகச்சரியான வழி.

3) உடல் எடையை குறைக்கிறது. காரணம், 1 கிலோ எடையை குறைக்க உங்களுக்கு 6600 கலோரிக்கள் தேவைப்படுகிறது. ஒரு நீளமான முத்தம் உடலில் உள்ள சர்க்கரையை சாதாரண அளாவை விட வேகமாக எரிக்கிறது. 10 நிமிடத்திற்கும் 10 கலோரிக்களை எரிக்கிறது. இது போதாதா உங்கள் உடல் எடையை குறைக்க?

4) முத்தம் உடல் மூப்பை தாமதமாக்குகிறது. முத்தமிடுதல் உங்கள் கண்ணங்களுக்கும் தாடை தசைகளுக்கும் இருக்கத்தை தளர்த்துகிறது.

5) முத்தமிடும் பொழுது பரவசமடைகிறீர்கள். பரவசமடையும் பொழுது இரத்தத்துடன் அட்ரீனலின் சுரந்து கலக்கிறது. அதனால் இதயத்துடிப்பு அதிகமாகி, நாடித்துடிப்பும் அதிகமாகிறது. அதனால் உங்கள் முழு உடலும் அதிக காற்றை (O2) பெறுகிறது. இது ஒரு சிறந்த cardiovascular பயிற்சி.

6) ஃபிரனோம்கள் (pheromones) என்னும் இரசாயணம் இருவருக்கும் இடையில் ஒரு wavelenght-ஐ தூண்டுகிறது. புதிதாக முதல் முதலாக முத்தமிடும் பொழுது இந்த ஃபிரனோம்கள் தான் தன் வேலையைக் காண்பிக்கும். ஆழ்நிலை மனதை வசீகரப்படுத்த வாசம் ஒரு மிக்கிய காரணகர்த்தாவாகிறது. இந்த ஃபிரனோம்கள் சரியாக இருந்தால், வெற்றி தான்.

7) முத்தமிடுதல் உங்கள் தற்பெருமையை கூட்டுகிறது. சந்தோஷமாக இருக்கும் பொழுது முத்தமிடும் பழக்கத்தை வைத்து கொள்வது நல்லது. காரணம், எப்பொழுதெல்லாம் நீங்கள் சோகம் ஆகிறீர்களோ அப்பொழுதெல்லாம் முத்தமிடுங்கள். நீங்கள் சந்தோஷமடைவீர்கள்.

முத்தமிடுதல் இச்சையை கிளிர்த்தெழுப்பும் செயலாக மட்டுமே பார்க்ககூடாது. மாறாக, தாய் தன் குழந்தையின் காயத்தில் முத்தமிடுவது கூட குழந்தையின் காயத்தை மனதளாவில் ஆற்றவே. நண்பர்கள் தங்களுக்குள் முத்தமிடுவது அவர்களின் நட்பை வெள்ளிப்படுத்த ஆகியவை. நபர்கள் வேறுபட்டாலும், முத்தமிடுவது கூறுவது ஒன்றைத்தான், அது அன்பை.

முத்தமிடும் பொழுது உங்கள் மூளைக்கும் (இருப்பவர்க்கு), முகத்தில் இருக்கும் சதைகளுக்கும் இடையில் சிறு மினதிர்வை அனுப்புகிறது. அந்த மின் அதிர்வு உங்கள் உதடு, நா மற்றும் முகத்தில் இருந்து அனுப்பப்படும் அஞ்சல். உங்கள் மூளை உங்கள் உடலுக்கு பின் வரும் ரசாயணங்களை சுரக்க கட்டளை அனுப்பும்:

ஆக்ஸிடோசின் – இருவருக்கும் உள்ள உணர்ச்சி, பற்று, அன்பு, ஆர்வம், பக்தி, ஆசை முதலான எண்ணங்களை உருவாக்குவதில் உதவுகிறது.
டோபமைன் – அகச்சுவை, பரவசம், வலி ஆகியவற்றை மூளை செயல்படுத்த ஒரு முக்கியமான காரணி.
செரோடொனின் – ஒருவரின் மனநிலையை, உணார்ச்சியை பாதிக்கும்.
அட்ரீனலின் – இதயத் துடிப்பை, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உடலின் தனிச்சை செயலிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

கடைசியாக, இத்தாலிய ஓவியர் ஃபிராண்சிஸ்கோ ஹயீஸ் வரைந்த இந்த ஓவியம் தான் சிறந்த ஓவியமாக அறியப்படுகிறது. இது இத்தாலிய காதலை எடுத்துறைக்கிறது.

15 comments பெப்ரவரி 2, 2007

50. மணி – ஒரு நண்பனின் கதையிது

நம்முடன் விளையாடி, உறவாடிய நண்பன் ஒருவன் மனநிலை பாதிக்கப்பட்டு பிச்சை எடுத்துக் கொண்டிருப்பதை கண்டால் எப்படி இருக்கும்? அப்படித்தான் இருந்தது எனக்கும்.

அவன் பெயர் மணி. எங்கள் தெரு தான். எதிர் வீடு. ‘வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி’யவன். என்னை விட ஓரிரு வயது மூத்தவன். எல்லோரையும் போலத்தான் இருந்தான். தந்தை சிறிய வயதிலேயே இறாந்து விட்டார். தாயும், அவன் அண்ணனுடனும் வாழ்ந்து வந்தான். சிறிய வயதில் அவன் வயதுக்குறிய வளார்ச்சி அவன் அறிவுக்கு இல்லை தான். ஆனால், மற்றவரை போல தான். “எல்லோரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் தாம். என்ன நான் கொஞ்சம் அதிகம் பாதிக்கப்பட்டவன்” என்று (இயக்குனர்) பாலா சொல்வார். அப்படித்தான் அவனும். பேச்சு கொஞ்சம் போல குழரி குழரி பேசுவான். அதனால் அவனுக்கு தெருவில் வைத்த பெயர் “புளுத்த வாயன்” (அந்த வலியெல்லாம் உணராத வயசு). அவனை அப்படி ஏதாவது சொன்னால் போதும் அவன் அம்மா சண்டைக்கு வந்துவிடுவார்கள். எங்களுடன் தான் விளையாடுவான். எங்கள் வீட்டின் அருகில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தான்.

பின், ஒருநாள் அவனுக்கு ஆறுதலாய் இருந்த ஒரே சீவனான அவன் தாயும் இறந்தார். அப்பொழுது அவனுக்கு கூட இருக்க வேண்டியவர் அவர் அண்ணன் மட்டுமே. ஆனால், அவர் அவனை கண்டுகொள்ளவில்லை. அவர் திருமணம் ஆகி அவனை நிர்கதியாய் விட்டுவிட்டு சென்றுவிட்டார். சொத்திலும் பங்கு கொடுக்கவில்லை போல் இருக்கிறது. பிறகு அவனுக்கு என்ன நடந்தது என்று எனக்கும் தெரியவில்லை. காரணம், நானும் வேலை தேடி வீட்டை விட்டு கிளம்பி வந்து விட்டேன்.

அவன் தீவிர தி.மு.க. அனுதாபி. அவனை சீண்டவேண்டும் என்றால் கலைஞரை ஏதாவது சொன்னால் போதும். உடனே கோபம் வந்துவிடும். எங்கு இருந்தாலும் தேர்தல் என்றால் கட்டாயம் பூத்திற்கு வந்துவிடுவான். அவன் தான் பூத் ஏஜென்ட். அதனால், தேர்தலுக்கு அவனை கட்டாயம் தெருவில் பார்க்கலாம்.

கொஞ்ச நாள் பார்க்காமல் இருந்தேன். சில வருடங்களுக்கு பிறகு, ஒரு நாள் ஊரில் இருந்து சென்னை செல்லும் இரயிலில் அவனை பார்த்தேன். கூட ஒரு 7-8 சிறுவர்களுடன் இரயிலில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான். இரயிலை சட்டையால் சுத்தப்படுத்தி பின் காசு கேட்பார்களே, அதுபோல. அவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான். முதலில் அவனை எனக்கு அடையாளம் தெரியவில்லை. பின் கொஞ்ச நேரம் கழித்து அவன் வேலையை தொடர போய்விட்டான். பின் தான் உறைத்தது அவன் மணி என்று. பொது இடத்தில் அவனிடம் பேச எனக்கும் வெட்கமாக இருந்தது (ம்ஹூம்…இதை சொல்ல மட்டும் வெட்கம் இல்லை இந்த ராஸ்கலுக்கு). பின் தான் அவனுக்கு உதவாதது வருத்தத்தை தந்தது. அவன் என்ன எதிர்பார்த்திருப்பான்? கொஞ்சம் போல பணம். அவனுக்கு கொடுக்காததை நினைத்து எனக்கு நானே வெட்கப்படவேண்டியிருந்தது.

அப்புறம் அவனை தெரு பக்கம் காணவில்லை. இந்த பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்றிருந்த பொழுது (என் நண்பர்களில் ஒருவன் சொன்னது, “எல்லா சண்டாளன்களும் ஒன்னா வர்ராங்க. ஊர் என்ன ஆகப்போகுதோ?”), நண்பர்களுடன் அவன் கடையில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது நாங்களெல்லாம் சத்தம் போட்டு சிரித்துக் கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு வந்து நின்றான் மணி. மழிக்காத தாடியுடனும், தலைவிரிகோலமாக பார்க்கவே பரிதாபமாக இருந்தது. சற்று நேரம் எங்களையே பார்த்துக் கொண்டிருந்தவன், எதுவும் பேசாமல் வெறித்து பார்த்துவிட்டு பின் சென்றுவிட்டான். அவன் என்ன நினைத்திருப்பானோ? பின் அவனைப் பார்த்ததும் அங்கு நிசப்தம் நிலவியது. எங்கள் யாருக்கும் பேச்சே வரவில்லை. வெங்கி, “ஏண்டா! நம்ம கூட வெளயாடின ஒருத்தன இப்படி பாகுறப்போ நமக்கே பகீர்ன்னு இருக்குடா” என்றான். வெலவெலத்து போய்விட்டேன். உண்மை தான். என சொல்வது என்றே தெரியவில்லை.

3 comments ஜனவரி 19, 2007

வெஜிடேரியனிசம்

2-3 வினாடிகள் மட்டுமே பார்த்த ஒரு விஷயம் ஏனோ என்னை உலுக்கியது. சென்ற வாரம் பேருந்தில் திருத்தணி செல்லும் வழியில் ஒரு கறி கடையில் ஒரு ஆடு செத்துக் கொண்டு இருந்தது. ஒருவர் இன்னும் இரண்டு ஆடுகளை அவற்றின் ஒற்றை பின்னங் கால்களை தன் ஒரே கையில் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார். அந்த ஆடுகள் வர மறுத்து திமிரின. ஆனால், அவற்றால் என்ன செய்ய முடியும்?

மாமிசம் விற்கும் கடைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதில் ஒன்று, இரண்டு உயிர்கள் (ஆடுகளோ அல்லது மாடுகளோ அல்லது கோழிகளோ) ஒன்றை ஒன்று பார்த்தபடி சாகக்கூடாது என்று. இந்தக் காட்சியை நினைத்துப் பாருங்கள், நீங்களும் கொல்லப்படுகிறீர்கள் உங்கள் கண் எதிரிலேயே உங்களுக்கு வேண்டப்படுபவரும் கொல்லப்படுகிறார். எப்படி இருக்கும்?

இந்தக் கட்டுரை 2 1/2 வருடங்களுக்கு முன் எழுதப்பட்டது (மொழிமாற்றப்பட்டது). அதன் ஒரு பகுதியை இங்கு மீண்டும் பதிகிறேன். நானும் அசைவம் தான். இஸ்கான் கோவிலில் இரண்டு நாள் யோகா பயிற்சி அளித்தார்கள். அங்கு சென்று வந்த பிறகு நானும் சைவம் ஆனேன், 6 மாதத்திற்கு. ஆனால், சரக்கடிக்கும் பொழுது சைட்டிஷ் சாப்பிடமுடியாததால், மீண்டும் அசைவம் ஆனேன் :)

சைவத்திற்க்கு அப்பால்…

நாம் என்ன உட்கொள்கிறோமோ நாமும் அதே தான். இன்றைய உலகில் புலால் உண்பது வாழ்க்கையின் அங்கமாக ஆகிவிட்டது. அதுவும் விரைவு உணவு வந்ததும் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. சைவமாக இருப்பதற்கும் அசைவமாக இருப்பதற்கும் அப்படி என்ன வித்தியாசம் இருக்கப்போகின்றது? முதலில் சைவத்திற்கும் அசைவத்திற்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்போம்.

இந்த உலகில் உள்ள ஒவ்வொரு உயிரிணத்திற்கும் மத்திய நரம்பு மண்டலம் (Central Nervous System) உள்ளது. இந்த மண்டலம் உணர்ச்சி சம்பந்தப்பட்டது. வலி என்றால் என்ன என்று இந்த மண்டலம் தான் ஒவ்வொரு உயிர்க்கும் உணர்த்துகின்றது. ஆடு, மாடு, கோழி, முயல், காடை, பாம்பு, ஏன் மனிதனுக்கும் மற்றும் நம் சாப்பிடும் அனைத்து உயிரினத்திற்கும் இந்த மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் தான் இந்த உயிர்களை வதைக்கும் பொழுதும், கொல்லும் பொழுதும் வலி வந்து இந்த உயிர்கள் துடிக்கின்றது. சரி! நாம் சாப்பிடும் சைவ உணவு வகைகளான அரிசி, பருப்பு, பால், தாவரங்கள், ஏன் தண்ணீர் போன்றவையும் உயிருள்ளவைதானே என்ற கேள்வி எழலாம். அப்பொழுது இந்த உணவு வகைகளும் அசைவம் தானே ஆகின்றது? இல்லை! காரணம் இந்த உயிர்களுக்கு மேலே சொல்லப்பட்ட மத்திய நரம்பு மண்டலம் என்பது இல்லை. அதனால் அவற்றிற்கு வலி தெரியாது. இதுவும் ஒரு அசைவம் தான். ஆனால் நாம் இயற்கைக்கு உட்பட்டு, நமக்கு தரப்பட்டுள்ள எல்லை வரை செல்லலாம். கீதை சொல்கிறது : “இந்த உலகில் உயிர் வாழ ஒவ்வொரு உயிரும் அடுத்த உயிருக்கு உணவாக உள்ளது. ஆனால் நாம் நமக்கு அளிக்கப்பட்ட உணவை மட்டும் உண்டால், நாம் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவோம்”.

கீழ்கானும் ஒப்பீட்டை பாருங்கள்…

Comparison Carnivore Herbivore Human
Teeth: Incisors Short and pointed Broad, flattened and spade shaped Broad, flattened and spade shaped
Teeth: Canines Long, sharp and curved to tear flesh Dull and short (sometimes long for defense), or none Short and blunted
Teeth: Molars Sharp Flattened Flattened
Chewing None; swallows food whole Extensive chewing Extensive chewing
Saliva Acidic saliva: Carbohydrate digesting enzymes not present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present Alkaline saliva: Carbohydrate digesting enzymes present
Stomach Acidity with food in it pH 4 to 5 pH 4 to 5
Length of Small Intestine 3 to 6 times body length > 10 times body length 10 to 11 times body length
Colon Simple, short and smooth Long, complex Long, complex
Perspiration No skin pores; perspires through tongue to cool body Perspires through millions of skin pores Perspires through millions of skin pores
Nails Sharp claws Flattened nails or blunt hooves Flattened nails

நம்மிடம் உள்ள ஒரு தவறான கருத்து, “சைவ உணவு சாப்பிட்டால் புரதச் சத்து இருக்காது” என்பது. ஆனால் உண்மை என்னவென்றால் காய்கறிகள், பழங்கள், விதைகள், தானியங்கள், கொட்டைகள் முதலியவை அதிக அளவில் புரதச்சத்து கொண்டது. இந்த உலகின் சில பிரபல சைவர்கள்…

1. மாகாத்மா காந்தி : “ஆன்மீகம் நம்முடைய தேவைக்காக செய்யப்படும் உயிர் கொலையை தவிர்க்க சொல்கிறது.”

2. ஆல்பெர்ட் ஐண்ஸ்டீன் : “நம்முடைய வேலை உயிர் கொல்லும் மக்களிடம் மற்ற உயிர் மேல் அன்பு செலுத்துவதை எடுத்து சொல்ல வேண்டும்”

3. ஜான் ஊல்மேன் : “நாம் கடவுளை வணங்குவதும், அந்த கடவுள் உருவாக்கிய உயிரை கொல்லுவதும் ஒன்றுக்கொன்று முறன்பாடாக இருக்கிறது”

4. லியோ டால்ஸ்டாய் : “மனிதன் தன் வாழ்க்கையை சரியான பாதையில் செலுத்த விரும்பினால், முதலில் உயிர் கொலையை தடுப்பதில் இருந்து ஆரம்பிக்கட்டும்”

5. ஐசக் நியூட்டன்

6. தத்துவ ஞானி பிளேட்டோ

7. சாக்ரடீஸ்

8. பிதோகரஸ்

9. லியோனார்டோ டா வின்சி

10. கிரெக் சாப்பல்

11. ஓட்டப் பந்தைய வீரர் காரல் லீவிஸ்

12. மார்டினா நவரத்திலோவா

அசைவத்தின் விளைவுகள்…

முதலிடத்தில் இருப்பது இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள். பிரிட்டனில் 50 சதகிவித மரணங்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களே. 1961-க்கு முன்னாலேயே அமெரிக்க மருத்துவ சங்கத்தின் செய்திக் குறிப்பு “90 முதல் 97 சதவிகித இதய நோய்கள் சைவ உணவு உண்டால் தவிர்க்கலாம்” என்கிறது.

இதய நோய்க்கு அடுத்து இருப்பது புற்று நோய். நன்கு வேகவைக்கப்பட்ட இரைச்சி மற்றும் மீன்களில் கார்சினொஜென்ஸ் (carcinogens) உள்ளது. இது நம்முடைய DNA செல்களை தாக்கி, அவற்றை மாற்றி, புற்றுநோயை வளர்க்கிறது. மாமிசமானது தாவரங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை விட 14 மடங்கு அதிக பூச்சிக்கொல்லி மருந்தும் ரசாயணமும் கொண்டது.

பசி…பசி…பசி

ஒவ்வொரு வருடமும் சுமார் 2 கோடி பேர் உணவு இல்லாமல் மற்றும் தவறான உணவு ஆகியவற்றால் இறக்கிறார்கள். இவர்கள் உணவு எங்கே போகிறது? ஐ.நா.வின் தலைமைச் செயலர் கூருவது “பணக்கார நாடுகளின் அசைவ (இரைச்சி) உணவுதான் உலகின் பசிக்கும் பசி சம்பந்தமான இறப்புகளுக்கு காரணம்” என்கிறார். இது எந்த அளவுக்கு உண்மை? இதை பாருங்கள். 7.5 கிலோ தாணியங்கள் 20 பேருடைய பசியை போக்கும். ஆனால் அசைவ உலகில் இந்த 7.5 கிலோ தாணியத்தை ஒரு மாடு சாப்பிடும். அந்த ஒரு மாட்டை 2 பேர் மட்டுமே உட்கொள்கின்றனர். ஆக மேலும் 14 பேருக்கு தேவையான உணவுக்கு பல கிலோ அதிக தாணியங்கள் தேவைப்படுகின்றது. அது மட்டுமல்ல, ஒரு கிலோ அளவுள்ள மாட்டிரைச்சியை தயாரிக்க 16 கிலோ தாணியங்கள் தேவைப்படுகின்றன (John Robbins’ book ஓDiet for a New Americaஔ). இந்த 16 கிலோ தாணியங்கள் மற்றவரின் பசியை போக்கலாம் அல்லவா?

மற்றும் அமெரிக்கர்கள் தங்கள் அசைவ உணவில் 10 சதவிகிதம் குறைத்தாலேயே 10 கோடி பேருக்கு அதிகமாக உணவளிக்கலாம். ஒரு அமெரிக்கரின் 72 வயது சராசரி வாழ்க்கையில் உட்கொள்ளப்படும் உணவு:

1. 11 – கால்நடைகள்

2. 3 – ஆடுகள் மற்றும் ஆட்டுக்குட்டிகள்

3. 23 – பன்றிகள்

4. 45 – வான் கோழிகள்

5. 1100 – கோழிகள்

6. 391 கிலோ – மீன்கள்

மேலும், இந்த உலகில் உள்ள ஒவ்வொருவரும் சைவ உணவை உட்கொண்டால், உணவு உற்பத்தி 1000 கோடி மக்களுக்கு உணவளிக்கும் படி எட்டும். 1000 கோடி மக்கள் என்பது 2050-ல் இருக்கும் மக்கள் தொகை. அமெரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நிமிடமும் சுமார் 6,60,000 விலங்குகள் கொல்லப்படுகின்றன. அமெரிக்காவில் பயன்படுதப்படும் தண்ணீரில் பாதியளவு அசைவ உணவு தயாரிக்கவே பயன்படுத்தப்படுகிறது. மேலும் கன்றுகளை தொடர்ந்து உணவு இன்றி ஆடாமல் அசையாமல் ஈவு இரக்கம் இன்றி நிற்கவைத்து விடுவர். இதனால் அதன் நரம்புகள் இருகும். அந்த விலங்குகள் தன் வாழ்நாளில் இப்படி அப்படி திரும்பமுடியாது. மேலும் அவை வளர ஹார்மோன் ஊசிகளும் போடப்படும். அப்படிப்பட்ட மாடுகள் 4 மடங்கு அதிக விலைபோகும். உலகம் போற்றும் ஒரு மிகப்பெரிய தலைவரின் விசேஷ உணவு இதுதான். நாம் உட்கொள்ளும் அசைவமானது எவ்வாறெல்லாம் தயாரிக்கப்படுகின்றது? கோழிப் பண்னையில் பராமரிக்கப்படும் கோழிகள் கூண்டுக்குள் ‘அடைக்கப்பட்டுள்ளன’. அவற்றால் அங்கு இங்கு என் எங்கும் நகர முடியாது. மேலும் ஒவ்வொரு கோழியும் வருடத்திற்கும் 200 முதல் 220 முட்டைகள் இட நிர்பந்திக்கபடுகிறது. இதனால், அவைகளின் எலும்புகள் மெலிந்து, இறகுகள் உதிர்கிறது.

சைவத்தை பற்றி ஜார்ஜ் பெர்னார்ட் ஷா கூரும்போது “நம்முடைய உடம்பு இறந்து போன விலங்குகளின் சுடுகாடாக இருக்கும் வரை, இந்த இலட்சிய பூமி எப்படி நலமாக இருக்கும்?” என்கிறார். சில நாட்களுக்கு முன்பு தாய்லாந்தில் ஒரு உணவகத்தில் கலைக்கப்பட்ட கருவின் மாமிசம் விற்கப்பட்டன. நம்முடைய உணவு பழக்கத்திற்கும் கர்ம விணைகள் உள்ளன. சீனாவில் ‘தயாரிக்கப்பட்டு’ உலகையே அச்சுரித்திய சார்ஸ் நோய்க்கு முக்கிய காரணம் அவைகள் புனுகுப் பூனை எனப்படும் காட்டுப் பூனையை உணவாக உட்கொண்டதால் தான். நாம் செய்யும் பாவ செயல்களுக்கு துன்பப்படவேண்டும் என்பது இயற்கையின் மாற்ற முடியாத விதி. இதைத் தான் நியூட்டனின் மூன்றாவது விதி! இந்த உலகின் ஒவ்வொரு உயிரும், எரும்பாக இருந்தாலும் அல்லது எருமையாக இருந்தாலும், அவை பரமாத்மாவின் குழந்தையே. அந்த உயிருக்கு இழைக்கப்படும் கொடுமைகளை பரமாத்மா மன்னிக்காது. அதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்.

28 comments ஜனவரி 17, 2007

49. ‘பெரியார்’ படம் – ‘பகவான்’ பாடல்…

‘பெரியார்’ படப் பாடல்களை தரவிறக்கம் செய்து, என் கணினியில் தூங்கிக்கொண்டிருந்தது. சரி! பொழுது போகவில்லை என்று கேட்டேன். நான் பாடல்களை பெரும்பாலும் வரிகளுக்காக, வரிகளின் கோர்வையை, வரிகளை பயன்படுத்திய விதத்திற்காக கேட்பவன். இசை இரண்டாம் பட்சம் தான். ‘சீனா தானா’ பாடல் ஆகட்டும், ‘பூங்காற்றிலே’ ஆகட்டும் இரண்டையுமே ரசிப்பேன்.

இப்படத்தில் முதல் பாடல் ‘பகவான்’ என்று ஆரம்பிக்கும் பாடல். அமைதியான, ஆர்பாட்டமில்லாத இசை + பதிவு. இங்கே நான் ரசித்தது, அந்த ‘பகவான்’ பாடலின் வரிகளை. வசன நடையில், விவாதமாக செல்கிறது பாடல். இதில் நான் ரசித்தது அந்த அழகான விவாதம்.

பகவான் ஆகாயம், பூமி, வாயு, அக்னி, தண்ணீர், இவையாவும் படைத்து கடைசியாக மனிதனை படைத்தார் என்று ஒருவர் சொல்ல,

கடவுளை யாரு படைத்தார்? என்று எதிர்கேள்வி.

கடவுளை யாரும் படைக்கமுடியாது. அவர் சுயம்பு, தானா உண்டானவர்.

கண்காணாத உன் கடவுள் தானாக தோன்றும் பொழுது, கண்ணில் தெரிகின்ற அண்டம் தானாக ஆகாதோ?

அசுர குணம் உள்ளவர்கள் தான் இப்படி கேள்வி கேட்பார்கள். தேவர் குணம் உள்ளவர்கள் இப்படி குதர்க்கமாக பேச மாட்டார்கள்.

இந்திரன் யாரு?

தேவர் குல தலைவன்.

இராவணன் யாரு?

அசுரர் குல அரசன்.

காட்டில் இருந்த முனிவர் மனைவியின் கற்பை கெடுத்தவன் இந்திரன். கொண்டு சென்ற மாற்றான் மனைவியை கற்புடன் விட்டவன் இராவணன். இப்பொழுது சொல் குணத்தில் உயர்ந்தவன் யார்? தேவனா? அசுரனா?

அசுர குலத்திலும் அப்போ அப்போ நல்லவர்கள் இருந்திருக்கார்களே! நந்தனுக்கு நடராஜப் பெருமாள் மோட்சம் கொடுக்கவில்லையா?

நந்தனுக்கு மோட்சம் கொடுத்தீர்களா? அல்லது, தீயிட்டு எரிமூட்டி மோசம் புரிந்தீர்களா? மோட்சம் தந்தது முற்றிலும் உண்மை என்றால், அவன் சந்ததியெல்லாம், சன்னிதி இழந்து, சந்தியிலேயே ஏன் நின்றான்?

மனிதனாக இருந்தால் மடியாக இருக்கனும். தீட்டு என்று பெரியவர்கள் தெரியாமலா சொன்னார்கள்?

தீட்டு என்ன தீட்டு? குடிக்கிற தண்ணீரை தொடக்கூடாது. குளத்தில் கால் படக்கூடாது. எப்படி வரும் சுத்தம்? உங்கள் மேல் குற்றம். குளிக்காத பசுவை கும்பிடுகிறீர்கள். அதை குளிப்பாட்டும் மனிதனை ஏனய்யா கொல்கிறீர்கள்?

(தெலுங்கில்) வேத புராணம், இதிகாசங்களில் கூறப்பட்டதை அவமானம் செய்தவருக்கு சாப்பாடு போடக்கூடாது.

புராணம் இதிகாசம் ஆகியன வெறும் பொய் மோசம். பொய் பேசி பேசியே பொய்யாய் போய்விட்டது தேசம்.

புராணம், இதிகாசம் பொய் இல்லை.

ஆதாரம் கூறும்.

அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூன்று. அப்படியே இருக்கிறது. அழியவில்லை பாருங்கள்.

ஓஹோ! முதுகை தொட்டதும் மூன்று கோடுகள் விழுந்திருச்சோ? சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்லை. ஸ்ரீராமர் சீதையை தொடவே இல்லையா?

இது விதண்டாவாதம். பேசக்கூடாது.

இனிமேல் தான் சுவாமி பேசவே போகிறேன்.

ஆஹா! படத்தை பற்றி ரொம்பவே எதிர்பார்க்க வெச்சுட்டாங்கைய்யா!!

‘இடை’ என்று பழங்காலத்து இசை தோரணையில் (நாயகன் படத்தில் கூட வருமே ‘நான் சிரித்தால் தீபாவளி’, ‘ஓ! ரசிக்கும் சீமானே’), குத்து போன்ற ஒரு பாடல்.


உன்னிலே காமசூத்திரம், கண்ட பின் என்ன சாத்திரம்;

தாயவள் சொன்ன சேதியால், நானும் தான் ராஜ கோத்திரம்;

பகதூரைய்யா! பதறாதைய்யா!!

உறவு முறை பாரா உலகமய்யா

‘கடவுளா? நீ கல்லா?’ என்று ஒரு பாடல். இதற்கும் நல்ல பாடல் வரிகள். பெரும்பாலும் கேள்விகள்.


நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்!

நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்?”

‘தை தை’ – சுமாரான பாடல். கர்நாடக சங்கீதம். விஜயலக்ஷ்மி சுப்பிரமணியம் பாடியிருக்கிறார். கேட்க கேட்க நன்றாக இருக்கலாம். சுதா ரகுநாதனை பாடச் சொல்லியிருக்கலாமோ?

‘தாயும் யாரோ?’ என்று மற்றொரு பாடல். யேசுதாஸ் பாடியது. அருமையான பாடல் + வரிகள். மற்றும் அருமையான பீட்.

சாதாரணமாகவே பாடல்கள் பரவாயில்லை. ‘பெரியார்’ என்ற மாஸுடன் கேட்டால் நன்றாகவே இருக்கும்.

இளையராஜா இசையமைக்க மறுத்தது, அவர் பார்வையில் பார்த்தால், சரி தான் என்றே தோன்றுகிறது. கொடுத்து வைக்காதவர்கள் நாம் தான்.

ஆனால், என் கவலை, படம் பொதுவாக எல்லா மக்களுக்கும் பாடமான ஒரு படமாக ஆக்கப்படுமா?, அல்லது ‘தி.க.வினரின் படமாக’ மட்டும் முத்திறை குத்தப்படுமா? இது நிச்சயம் தி.க.வினரின் கையில் தான் இருக்கிறது. காரணம், இவர்கள் பன்னும் சேட்டை தான்.

36 comments ஜனவரி 9, 2007

Previous Posts


மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

arunachalam மேல் சரிகிறதா நான்காவது தூண்?
சீனு மேல் இப்படி கூட திருடலாமோ?
துளசி கோபால் மேல் இப்படி கூட திருடலாமோ?
சீனு மேல் தொட்டால் பூ மலரும் – நிய…
சிவகுமார் மேல் இப்படி கூட திருடலாமோ?

சுவடுகள்

Blog Stats