Archive for அக்டோபர், 2009

உ.போ.ஒ: ‘அறிவாளி’ கமல்

நிச்சயம் கமல் அறிவாளி தான். காரணம், ஒரு அறிவாளியால் தான் மற்றவரை முட்டாளாக்க முடியும்.

சில கமல் படங்களுக்கு பிறகு வந்த ஒரு படம் இது. அந்த சில படங்கள், கமல் படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என்ற பிம்பத்தை தோற்றுவைக்கிறது, எப்படி ரஜினி படம் என்றால் லாஜிக் பார்க்காமல், சும்மா ஒரு என்டர்ட்ரெய்னராக பார்ப்போமோ, அதை போல.

கமலில் முந்தைய படமான ‘ஹே ராம்’-ஐ எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியை கொல்லும் நோக்கத்தில் இருப்பதால் அவர் காந்தியவாதிக்கு எதிரானவர் என்றா? இல்லை கடைசியில் மனம் மாறுவதால் அவர் காந்தியை ஆதரிப்பவர் என்றா? அது படத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்து. காந்தியின் மீது வெறுப்பு ஏற்பட்ட சமயத்தில், கல்கத்தா நகரில் வலம் வரும்போது, காந்தியின் அறிமுக காட்சியில் கீழே மக்கள் கூடியிருக்க, மேலே ஜன்னலை திறந்து காந்தி வெளிப்படுவார். மென்மையானவராக நம்பியிருக்கும் மக்கள் முன்னிலையில் அந்த காட்சியில் அந்த ஜன்னல் கதவை சற்றே வேகமாக “படாரென்று” திறந்து காந்தி வெளிப்படுவார். அதே காந்தியை திருந்தியவாரக சாகேத் ராம் சந்திக்கும் போது மென்மையாக காட்டியிருப்பார் இயக்குநர் கமல்.

இந்த இரு காட்சிகளை எப்படி எடுத்துக் கொள்வது? காந்தியை ஒரு நெகடிவ் பாத்திரமாகவா? அல்லது சாகேத் ராம் பார்வையில் (அந்த சூழ்நிலையில்) காந்தி முதலில் ஒரு வெறுக்கப்படும் நபராகவா, பின் மென்மையானவராக?

ஒரு காட்சியை பார்ப்பவரின் மனநிலையை பொறுத்து அதன் அர்த்தம் மாறும். வோடஃபோன் நாய்க்குட்டி ‘டை’ எடுத்து ஓடிவரும் போது ஒரு அழகு தெரிந்தது. அந்த நாய்க்குட்டியின் பாசம் தெரிந்தது. ஆனால், வீட்டில் சிக்கன் சாப்பிடும், ஃப்ளூ க்ராஸ் அமைப்பிற்கோ அந்த நாயை கொடுமைப்படுத்துவதாக(!) தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான். ஒன்று, கமல் பார்வையாளர்களை குழப்பி அதில் மீன் பிடிக்கிறார். அல்லது, அந்த பாத்திரத்தின் பார்வையில் படம் நகர்கிறது.

முதலில் “எ வெட்னஸ்டே” பாத்ததால் இயல்பாகவே “உ.போ.ஒ” பிடிக்கவில்லை. நஸ்ருதீன் ஷாவை போல் இல்லாமல் இங்கே கமல் தனியாக தெரிந்தார். ஞாநி சொல்வதை போல “என்னைப் பார், என் நடிப்பைப்பார் என்று ஒவ்வொரு பிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக் கொண்டு பல காலம் ஆகிறது”. இது தான் பிரச்சினையே. ஆனால் தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கு இது தான் தேவைப்படுகிறது. அதை கமல் பயன்படுத்திக் கொள்கிறார்.

“Mr. I.G.R.Maarar…I hope you are aware of the power of State of the art explosives…” – என்று அட்சரசுத்த ஆங்கிலத்தில் சொல்லும் பொழுதே அவர் காமன் மேன் இல்லை என்று தெரிந்துவிடுகிறது. இது கமல் தன்னை எல்லோரும் பாராட்ட வேண்டும் அன்ற மேனியாவில் மாட்டிக்கொண்டுள்ளார்.

ஆனால், வலைத்தளங்களில் பலர் பல விதமாக இந்த ஒரு படத்தை அலசியிருப்பது அதிகமோ என்று தோன்றுகிறது. தோன்றுவது என்ன. அதிகம் தான். சின்ன சின்ன விஷயத்தை கூட நோன்டி நோன்டி குறை சொல்லியிருப்பதை என்னவென்று சொல்ல? படத்தை படமாக பார்க்காமல் ஹீரோவுக்காக பார்க்கும் கலாச்சாரம் இன்னும் முடியவில்லை, தமிழ் மக்களிடம் என்பதையே இது காட்டுகிறது. இவர்கள் தான் விஜய்யையும், சிம்புவையும் நக்கலடிப்பவர்கள். ஆனால், கமல் படமென்றால் மட்டும் ‘கமல் படம்’ என்று பார்ப்பார்கள்.

கமலின் இந்த ஃபார்முலாவில் வந்த படம் தான் தசாவதாரம். அது தெரியாமல் தான் கலைஞரும், வீரமணியும் பாராட்டித் தொலைத்தார்கள். ஆத்திகத்தை வெளிப்படையாக கிண்டல் அடித்தாலும், புரிந்துகொள்ளா தெரியாத ரசிகர்கள் அதையும் ஒரு சாமி படமாகத்தான் பார்ப்பார்கள்.

ஒரு ரிப்போர்ட்டர் சிகரெட் பிடிப்பதாக காட்டியிருப்பதை கூட வக்கிரம் என்கிறார் ஞாநி. கமல் எந்த காரணத்திற்காக அந்த காட்சியை வைத்தார் என்று நமக்கு தெரியாது. ஒரு வேளை, பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பதாக காட்டியிருப்பதால் பெண்கள் பல கட்டுபெட்டித்தனமான சட்டங்களில் இருந்து விடுபடுகிறார்கள் என்று காட்டுவதற்காக கூட அந்த காட்சியை வைத்திருக்கலாம். இவர்களாகவே அதற்கு ஒரு கற்பனை பிட்ட போடுறது (இப்போ நான் போட்ட மாதிரியே) என்ன நியாயம்? அந்த கம்ப்யூட்டர் பையன் என்ன ஜாதின்னு நான் நினைக்கவேயில்லை, அதை போன்ற புண்ணியங்களை ஞாநி போன்றவர்கள் தான் எற்றுக்கொள்கிறார்கள்.

இது ஒரு சாதாரண படம். இதை போய் அக்குவேறாக ஆணிவேறாக அலசி விளம்பரம் கொடுத்திருப்பது தேவையற்றது. இந்த தமிழகத்தில் எதையும் சரியான கண்ணோட்டத்தில் பார்க்கத்தெரியாத மக்கள் தொகை சற்றே அதிகமாக தெரிகிறது. அப்படியே இது ஒரு பிரச்சாரப் படமாக இருந்தாலும் அதற்கு எதுக்கு இவ்வளவு விளம்பரம்? நாமென்ன முட்டாள்களா? அது சரி! நைக் பேர் போட்ட டீ சர்ட்டை போடுறது கூட பேஷன் தானே. மறைமுகமாக நம்மை நைக் கம்பேனி விளம்பரமாக பயன்படுத்திக் கொள்வது கூட தெரியாத ஞான சூனியங்கள் நாம்.

“அங்கவை சங்கவை”யை கண்டிக்க மாட்டார்கள். ஏன்? ஹவாலா பணத்தை கை பாத்தி கொடுப்பது முஸ்லீம்கள் என்று பச்சையாகவே காட்டப்படுகிறது சிவாஜியில். எனக்கு முன் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் “இவனுங்க தானா இதயெல்லாம பன்னுறது?” என்று அப்பாவியாக புரிந்து கொண்டார்கள். இதெல்லாம் கண்ணுக்கு தெரியாதா? காமென் மேனின் மனைவி “என்னது இன்ஷா அல்லாவா?”னு கேட்டால் உடனே கமல் தன்னை ஒரு முஸ்லீமாக காட்டிக் கொண்டார் என்று ப்ரேக்கிங் நியூஸ் போடவேண்டியது.

என்னை பொறுத்த வரையில் கமல் நம் எல்லோரையும் பயன்படுத்திக் கொள்கிறார். படத்தில் அவர் ஒரு காமன் மேன். ஆனால் உண்மையில் அவர் ஒரு பிஸினஸ் மேன். ஒரு வேளை நான் மேலே எழுதியிருப்பதை போல கமல் நினைக்கவில்லையென்றால்? கமல் என்னையும் சேர்த்து தான் முட்டாளாக்கியிருக்கிறார் ;)

9 comments அக்டோபர் 14, 2009


மேல்

அண்மைய இடுகைகள்

அண்மைய மறுமொழிகள்

Kannan மேல் இந்து மதம் Vs மூட நம்பிக்…
sivaji rasigan மேல் சிவாஜி கணேசன் – ஒரு…
சீனு மேல் வெஜிடேரியனிசம்
shri ramesh sadasiva… மேல் உ.போ.ஒ: ‘அறிவாளி’…
shri ramesh sadasiva… மேல் வெஜிடேரியனிசம்

சுவடுகள்

Blog Stats